லண்டனிலிருந்து 828 பயணிகளுடன் புறப்பட்ட உலகம் சுற்றும் உல்லாசக்கப்பல் ஒன்று தெற்கு ஆஸ்திரேலியாவின் அடிலெய்ட்டுக்கு அண்மையில் மின்சாரமில்லாமல் நடுக்கடலில் தத்தளித்துவிட்டு அடிலெய்ட் கரையோரம் வந்து மீண்டும் புறப்பட்டிருக்கிறது.
இந்த சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை இடம்பெற்றிருப்பதாக அறியமுடிகிறது.
லண்டனிலிருந்து கடந்த அக்டோபர் மாதம் புறப்பட்ட Vasco da Gama உல்லாசக்கப்பல், பசுபிக்கை ஊடறுத்து ஆஸ்திரேலியா - நியூசிலாந்து கடற்பரப்பை அண்டிப்பயணம் செய்துகொண்டிருந்தபோது இன்று அதிகாலை 5.45 மணியளவில் கப்பல் முழுவதுக்குமான மின்சாரம் தடைப்பட்டுவிட்டது.
இதனைத்தொடர்ந்து, கப்பலுக்கான குடிதண்ணீரும் கிடைக்கவில்லை. மலசல கூடங்களும் செயற்படவில்லை. கப்பல் பொறியியலாளர்கள் எவ்வளவோ முயன்றும் மின்னிணைப்பை மீண்டும் எற்படுத்தமுடியவில்லை.
நடுக்கடலில் கப்பல் வட்டமடிக்கத்தொடங்கிவிட்டதாக கப்பலிலிருந்த ஒருவர் ஆஸ்திரேலிய வானொலிக்கு வழங்கிய பேட்டியில் கூறியிருக்கிறார். கப்பலில் இருந்தவர்கள் அனைவரும் பீதியடைந்திருக்கிறார்கள்.
பின்னர், கப்பல் ஒருவாறு அடிலெய்ட் துறைமுகத்துக்கு வந்து சேர்ந்து, அங்கு மீண்டும் மின் இணைப்பை ஏற்படுத்தும் வேலைகள் வெற்றிகரமாக பூர்த்திசெய்யப்பட்டன.
மீண்டும் இன்று காலையே பயணத்தை தொடர்ந்துள்ள கப்பல், சுயஸ் கால்வாய் ஊடாக சென்று எதிர்வரும் மார்ச் மாதம் லண்டனை சென்றடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
