அண்மையில் ராஜன் என்பவர் இந்தியாவிலிருந்து திரும்பும் போது Indian sweets என்று நாம் பொதுவாக அழைக்கும் இனிப்புப் பண்டங்களை எடுத்துவந்திருந்தார். அவற்றைப்பார்த்த சுங்க அதிகாரிகள் அந்த தின்பண்டங்களில் dairy என்ற பாற்பொருட்கள் சேர்க்கப்பட்டுள்ளதால் அதை நாட்டுக்குள் அனுமதிக்கமுடியாது என்று கூறிவிட்டார்கள்.
அந்த உணவுப்பொருட்கள் ghee என்ற நெய்யால் செய்யப்பட்டவை என்பது உண்மைதான் என்றபோதும் ஆசையாய் வாங்கிவந்த இனிப்புகளைக் கொண்டுவந்து தமது நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் கொடுக்கமுடியாமல் போய்விட்டதே என்ற ஏமாற்றம் அவருக்கு ஏற்பட்டது.
இந்தப்பின்னணியில் Dairy என்ற பாற்பொருட்களை பயணிகள் நாட்டுக்குள் கொண்டுவருவதற்கு கட்டுப்பாடுகள் உள்ளனவா என்பதைப் பார்ப்போம்.

ஆஸ்திரேலிய அரசின் Department of agriculture, Fisheries and Forestry என்ற திணைக்களம் நாட்டுக்குள் கொண்டுவரக்கூடிய உணவுப் பொருட்கள் தொடர்பாக சில வரையறைகளை நிர்ணயம் செய்துள்ளது.
குறிப்பிட்ட சில உணவுப்பொருட்கள் மற்றும் plant materials என்ற தாவரத்தின் பகுதிகள், animal products என்ற மிருகங்களிடமிருந்த பெறப்பட்ட பொருட்கள் என்பன ஆஸ்திரேலியாவுக்குள், மிக மோசமான pests என்ற பூச்சிகளையும், நோய்களையும் கொண்டுவரும் என்றும், இதனால் எமது விவசாயத் துறை, உல்லாசப்பயணத்துறை என்பன பாதிக்கப்படுவதோடு எமது தனித்துவமான சுற்றாடல் அமைப்பும் வாழ்க்கைமுறையும் வெகுவாகப் பாதிக்கப்படும் என்றும் அது வரையறை செய்துள்ளது.
இதுதவிர இந்தகட்டுப்பாடுகள் தொடர்பான திட்டவட்டமான வரையறைகள் இருக்கின்றன.
Cheese, butter மற்றும் பாற்பொருட்களினால் ஆன பொருட்கள் தொடர்பாக Department of Agriculture, Fisheries and forestry திணைக்களம் விடுத்துள்ள அறிவுறுத்தல் இப்படிச் சொல்கிறது.
பின்வரும் நிபந்தனைகளுக்கு அமைய பாற்பொருட்கள் அல்லது பாற்பொருட்கள் சேர்க்கப்பட்ட உணவுப்பொருட்கள் நாட்டுக்குள் கொண்டுவரப்படலாம். ஆனால் அவற்றைக் கொண்டுவந்திருப்பதாக declare- பிரகடனம் செய்யவேண்டும். அவை இந்த நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யவேண்டும்.
- Infant formula என்ற சிசுக்களுக்கான பால்பவுடருக்கு அனுமதியுண்டு.
- Commercially prepared and packaged - வர்த்தக அடிப்படையில் ஆலைகளில் தயாரிக்கப்பட்டு முறையாக பொதி செய்யப்பட்டவை அனுமதிக்கப்படும்.
- எந்த நாட்டில் உற்பத்தி செய்யப்பட்டது என்ற விபரம் இருக்கவேண்டும் . FMD என்ற foot and mouth disease free country என்று பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நாடுகளின் பட்டியலில் உள்ள நாடாக அந்த நாடு இருக்கவேண்டும்.
- சொந்தப் பயன்பாட்டிற்கானதாக இருக்கவேண்டும் ; வர்த்தக நோக்கங்களுக்காகக் கொண்டுவரப்படக் கூடாது.
- மனிதர் உட்கொள்ளும் உணவுப்பொருட்களாக இருக்கவேண்டும். விலங்குகளுக்கான உணவுப்பொருளாக இருக்க க் கூடாது.
- 10 கிலோகிராம் அல்லது 10 லீட்டருக்கு அதிகமானதாக இருக்கக் கூடாது.
இந்த நிபந்தனைகள் பூர்த்திசெய்யப்பட்டால் மட்டுமே அந்த பொருட்கள் நாட்டுக்குள் அனுமதிக்கப்படும். அனுமதிக்கப்படாதவை அப்புறப்படுத்தப்படும் அல்லது அழிக்கப்படும். அல்லது பயணி விரும்பினால் அவரது சொந்தசெலவில் எந்த நாட்டிலிருந்து கொண்டுவரப்பட்டதோ அந்த நாட்டுக்கு திருப்பி அனுப்பப்படும்.
ராஜன் கொண்டுவந்த இனிப்புகளைப்பொறுத்த அளவில் பிரதானமான மூன்று நிபந்தனைகளை இவை பூர்த்தி செய்யவில்லை.
அதாவது வர்த்தக அடிப்படையில் ஆலைகளில் தயாரிக்கப்பட்டு பொதிசெய்யப்படவில்லை; எந்த நாட்டில் தயாரிக்கப்பட்டது என்ற விபரம் பொதியில் இல்லை-விற்பனை செய்த நிறுவனத்தின் பெயர் மட்டுமே உள்ளது. பிரதானமாக கால்நடைகளுக்கு ஏற்படும் FMD என்ற நோய் இல்லாத நாடு- foot and mouth disease free country என்ற நாடுகளின் பட்டியலில் இந்தியா இல்லை.

Foot and mouth disease- FMD எவ்விதமான பாதிப்பை இங்கு ஏற்படுத்தும்?
எமது நாட்டில், கால்நடைகள் மற்றும் விலங்குகளுக்கு குறிப்பாக பன்றி, ஆடு, செம்மறியாடு, மான் என்பவற்றுக்கு ஏற்படக்கூடிய FMD என்ற foot and mouth disease இல்லை என்பதோடு FMD free country என்ற பட்டியலில் ஆஸ்திரேலியா உள்ளது. FMD வைரஸ்கள் பிரதானமாக அந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ள விலங்குகளின் பாலிலிருந்தே பரவுவதாக ஆராய்ச்சிகள் நிரூபித்திருக்கின்றன. இதையே Australian Quarantine and Inspection Service என்ற அமைப்பும் உறுதி செய்திருக்கிறது. இந்த நோய் இங்கு பரவினால் பாற்பண்ணைப் பொருட்களை அதிக அளவில் உற்பத்திசெய்யும் எமது நாட்டின் பொருளாதாதரம் மற்றும் வேலைவாய்ப்புகள் என்பன பெரிதளவில் பாதிக்கப்படும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.
FMD என்ற நோய் Aphthovirus என்ற வைரஸ் மூலமாகப் பரவுகிறது. ஜப்பான் மற்றும் கொரியா தவிர்ந்த ஏனைய ஆசிய நாடுகளில் FMD வைரஸ் இன்னும் இருப்பது உறுதிசெய்ய்பட்டுள்ளது. அதே போல சில கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும் ரஷ்யா, மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் மத்திய மற்றும் தென்னமெரிக்க நாடுகளிலும் FMD வைரஸ்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த காரணங்களுக்காகவே ராஜன் கொண்டுவந்த உணவுப்பொருட்கள் நாட்டுக்குள் அனுமதிக்கப்படவில்லை என்பது தெளிவாகிறது.
FMD தவிர்ந்த வேறு பிரச்சனைகள் உள்ளனவா?
பொதுவாக நாட்டுக்குள் கொண்டுவரப்படும் உணவுப்பொருட்களைப் பொறுத்த அளவில் இருவேறு பிரச்சனைகள் உள்ளன.

ஒன்று microbial contamination என்ற நுண்ணுயிர்கள் மற்றும் வைரஸ்கள் மூலமாக வரக்கூடிய பாதிப்புகள். மற்றையது chemical contamination என்ற வேதியல் பாதிப்புகள்.
விலங்குகளுக்குத் தொற்றும் FMD தவிரவும் salmonella, escherichia, shigella yersina, brucella, listeria, staphylococcus போன்ற நுண்ணுயிர்கள் காரணமாக மனிதருக்கு பெரும் பாதிப்புகள் ஏற்படக்கூடும். திறந்த கலன்களில் வைத்து விற்பனைசெய்யப்படும் உணவுப்பொருட்களில் நோய்க்கிருமிகள் இருக்கக்கூடும். இதை உண்பவர்கள் கடுமையான சுகவீனமடையக் கூடிய வாய்ப்புகள் உண்டு. சுத்தமான சுற்றாடல் உள்ள ஆலைகளில் சுகாதார முறைப்படி தயாரிக்கப்பட்டு பொதி செய்யப்படும் உணவுப்பொருட்களில் இந்த அபாயம் இல்லை என்பதாலேயே வர்த்தக அடிப்படையில் ஆலைகளில் தயாரிக்கப்பட்டு seal செய்யப்பட்ட உணவுப்பொருட்கள் அனுமதிக்கப்படுகின்றன.
அதேபோல வேதியல் பொருட்கள் பல கட்டங்களில் உணவுப்பொருட்களில் கலக்கக்கூடும். அதே நேரத்தில் தனிப்பட்டவர்களால் மற்றும் சிறு வரத்தகர்களால் தயாரிக்கப்படும் உணவுப்பொருட்களில் இந்த வேதியல் பொருட்கள் அனுமதிக்கப்பட்ட அளவில் பயன்படுத்தப்பட்டுள்ளதா என்பதற்கு உத்தரவாதமில்லை. இதன் காரணமாக பாரதூரமான விளைவுகள் ஏற்படக்கூடும்.
ஆகவே பொதுவாக உணவுப்பொருட்களை நாட்டுக்குள் அனுமதிக்கும்போது அவ்வுணவுகளால் மக்களின் உடல் நலம் பாதிக்கப்படாது என்பதும் உறுதிசெய்யவேண்டியுள்ளது.
உல்லாசப் பயணியாக வரும் பயணி ஒருவர் நாட்டுக்குள் கொண்டுவரும் பொருட்கள் தொடர்பாக Passenger arrival card எனும் பிரகடனத்தில, பொய்யான தகவல் கொடுத்தாலோ அல்லது பிரகடனம் செய்யத் தவறினாலோ அவருக்கு நாட்டுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்படலாம் என்றும் அவர் திருப்பி அனுப்பப்படலாம் என்றும் bio security அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள்.

ஒரே மாத த்திற்குள் 14 பயணிகளுக்கு இக்காரணங்களுக்காக நாட்டினுள் நுழையும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Covid 19 இற்கு முந்தைய 2019 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இந்தியப்பிரஜைகள் என்று தமது incoming passengers card இல் குறிப்பிட்டிருந்த 1358 பேருக்கு தலா 444 ஆஸ்திரேலிய டாலர்கள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இவர்களுள் 4 சதவீதமானவர்கள் பாற்பொருட்கள் அல்லது பாற்பொருட்களாலான உணவுப் பொருட்களை கொண்டுவந்தவர்கள் என்று bio security அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள்.
இப்படியான அபராத த்தொகையை 2664 ஆஸ்திரேலிய டாலர்களாக அதிகரிக்க சிபாரிசு செய்யப்பட்டுள்ளது.
மிகக் கடுமையான விதிமீறல்களைச் செய்வோர் மீது கிரிமினல் வழக்கு தொடரப்படக்கூடும் என்றும் 444,000 ஆஸ்திரேலிய டாலர்கள் வரை அபராதம் விதிக்கப்படக் கூடும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in
பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில்
செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
