ஹாலிவுட் திரைப்படங்களில் வருவது போல பூமியை நோக்கிவரும் asteroids என்ற பாறைகளின் அல்லது சிறு கோள்களின் மீது மோதி அவற்றைத் திசைதிருப்பும் முயற்சியொன்றை எதிர்வரும் 27 செவ்வாய்க்கிழமை NASA மேற்கொள்ளவிருக்கிறது. இந்த நிகழ்வை விஞ்ஞான உலகம் வெகு ஆவலுடன் எதிர்பார்த்திருக்கிறது.
சூரியனைச் சுற்றி பல கோள்கள் சுற்றுகின்றன. சில பெரியவை; சில சிறியவை. பெரிய கோள்கள் அல்லது கிரகங்களுள் நாம் வாழும் இந்த பூமியும் ஒன்று. சூரியனுக்கு அண்மையில் இருப்பது மெர்குரி- புதன், அடுத்து வீனஸ்- வெள்ளி, அடுத்ததாக பூமி, அடுத்து mars- செவ்வாய்- , Jupiter - வியாழன், Saturn- சனி Uranus, Neptune என்று வட்டம் விரிவடைகிறது. இந்த பெரிய கோள்களைத்தவிர ஆயிரக்கணக்கான asteroids என்ற சிறு கோள்கள், இன்னுஞ்சொல்லப்போனால் மிகச் சிறிய பாறைகளும் சூரியனின் வட்டப்பாதையில் சுழன்றுகொண்டிருக்கின்றன.

இந்த பாறைகள் செவ்வாய் கிரகத்திற்கும் வியாழனுக்கும் நடுவில் உள்ள வட்டப்பாதையிலேயே ஏராளமாக இருக்கின்றன. இதனால் இப்பகுதி asteroid belt என்று அழைக்கப்படுகிறது. ஆயிரக்கணக்கில் சுழன்றுகொண்டிருக்கும் இந்த பாறைக்குன்றுகள் அளவில் வேறுபடுகின்றன. சில பாறைகள் எகிப்தில் இருக்கும் பிரமிட்டுகளின் 140 மீட்டர் அளவிலானவை. சில பாரிஸிலுள்ள Eiffel கோபுரம் அளவு 300 மீட்டர் உயரம் மற்றும் 300 மீட்டர் அகலமுடையவை. வேறு சில Dubai இலுள்ள Burj Khalifa அளவு 830 மீட்டர் நீள அகலங்களை உடையவை. இதைவிட பெரியவையும் இருக்கின்றன. இந்த asteroid பாறைகள் சூரியனின் சுற்றுவட்டப் பாதையை விட்டு விலகி பூமியின் மேற்பரப்பில் மோதக்கூடிய சாத்தியங்கள் நிறையவே இருக்கின்றன.
2013 ஆம் ஆண்டு பெப்ரவரி 15 ஆம் திகதி, பூமியை நோக்கி வந்த asteroid என்ற பாறை ஒன்று ரஷ்யாவில் CHELYABINSK என்ற நகரத்தை நெருங்கமுன் வானில் வெடித்துச்சிதறி நெருப்புக்கோளங்களாக யூரல் மலைத் தொடர் பகுதியில் எரிந்துபோனதாகப் பதிவாகியிருக்கிறது. பூமிக்கு மேல் 20 கி். மீ. வெடித்த இந்த பாறையின் துகள்கள் Chelyabinsk நகரில் பல இடங்களில் வீழ்ந்ததாகச் சொல்லப்படுகிறது. அதேபோல காலங்காலமாக பல சிறிய பாறைகள் பூமியைநோக்கி வந்தாலும் அவை பூமியைச் சுற்றியுள்ள வளிமண்டலத்திலேயே எரிந்து போவதாக NASA விஞ்ஞானிகள் சொல்கிறார்கள். அவை பூமிக்கு வந்து சேருவதில்லை. 140 மீட்டருக்கு அதிகமான விட்டமுள்ள பாறைகள் பூமியை நோக்கி வந்தால் இவை Potentially Hazadous Asteroids - பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடியவை என்ற வகையில் வரும் என்றும் இவை பூமியின் மேற்பரப்பில் மோதினால் மிக மிக பாரதூரமான பாதிப்புகள் ஏற்படும் என்றும் விஞ்ஞானிகள் சொல்கிறார்கள்.
பூமியின் மீது பெரிய asteroid என்ற பாறை மோதும் நிலை உருவானால் என்ன செய்வது; asteroid இன் பாதையத் திருப்பமுடியுமா; அது பூமியின் மீது மோதினால் ஏற்படக் கூடிய பாதிப்புகளைத் தடுக்கமுடியுமா என்பதைப் பரீட்சித்துப் பார்க்கும்.

NASA வின் project தான் DART -Double Asteroid Redirection Test. இந்த சோதனைக்காக விண்வெளியிலுள்ள asteroid என்ற உண்மையான பாறை ஒன்றின்மீது NASA வின் spacecraft விண்கலம் ஒன்று இம்மாதம் 27 ஆம் திகதி - மோதவிருக்கிறது.
NASA இந்த சோதனைக்காக உண்மையான சிறுகோள் அல்லது பாறைமீது மோதப்போவதாகச் சொல்வது உண்மையில் ஒரு அபூர்வமான நிகழ்வாகவே இருக்கிறது. இது எப்படி திட்டமிடப்பட்டிருக்கிறது?
இதற்காக Dimorphos என்ற ஒரு asteroid பாறை தெரிவுசெய்யப்பட்டுள்ளது. இது சுமார் 160 மீட்டர் diameter- விட்டத்தை உடையது. பூமியிலிருந்து 11 மில்லியன் கி.மீ. தொலைவிலுள்ளது. இந்த Dimorphos என்ற பாறை, பூமியின் மீது மோதக்கூடிய வாய்ப்புகள் இல்லை என்றபோதும் சோதனைக்காக இந்த பாறை தெரிவுசெய்யப்பட்டுள்ளது. இந்தப் பாறைமீது மோதி அதன் பாதையைத் திசை திருப்புவதற்காக 330 மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில் சுமார் பத்து மாதங்களுக்குமுன் ஒரு spacecraft விண்கலம் ஒன்று DART என்ற பெயரில் விண்வெளிக்கு அனுப்பப்பட்டுள்ளது. இது ஒரு சிறிய மோட்டார் காரின் அளவை ஒத்ததாகும்.

இந்த விண்கலம் மணிக்கு 21000 கி. மீ. வேகத்தில் போய் Dimorphos பாறையின் மீது மோதி அதன் பாதையைத் திசை திருப்பும். இந்த விண்கலத்தைத் தொடர்ந்து பயணிக்கும் சிறிய suitcase அளவிலான Italian Space Agency இன் தயாரிப்பான LICIACube என்ற satellite- செய்மதி, இந்த மோதலின் போது ஏற்படும் நிகழ்வுகளைப் படம் பிடித்து சமகாலத்தில் பூமிக்கு அனுப்பும்.
இந்த சோதனை பற்றி John Hopkins பல்கலைக்கழக விஞ்ஞானி Bobby Braun கருத்து தெரிவிக்கும்போது, ‘இது கோள்களில் இருந்து நம்மைப் பாதுகாக்க எடுக்கப்படும் மனித குலத்தின் முதல் முயற்சி’ என்று தெரிவித்திருக்கிறார்.
‘இந்த பாறை பூமியில் வந்து மோதக்கூடிய சாத்தியம் அறவே இல்லை. பாதுகாப்பு காரணங்களுக்காகவே இந்த பாறை தெரிவு செய்யப்பட்டுள்ளது. இது விஞ்ஞான தொழில்நுட்பத்துறையில் புதிய முயற்சியாகும்’ என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.
விண்கலம் Dimorphos என்ற பாறையின் மீது மோதியதன் பின்னர் என்ன நடக்கும்?
DART என்ற விண்கலம் மணிக்கு 21000 கி. மீ வேகத்தில் போய் பாறை மீது மோதி பாறை சுழலும் பாதையின் திசையைத் திசை திருப்பும். அதன்பின்னர் அங்கிருந்து வரும் செய்மதியின் படங்கள் மூலமாகவும் பூமியிலிருக்கும் தொலைநோக்கிகள் மூலமாகவும் பாறை பயணிக்கும் பாதையில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறதா; எவ்வளவு மாற்றம் ஏற்பட்டிருக்கிறது என்பது கணிக்கப்படும்.

‘இந்தச் சோதனையிலிருந்து பெறப்படும் தரவுகள் ‘Planetary Defence Strategies’ என்ற கிரகங்களிலிருந்து எம்மைப் பாதுகாத்துக்கொள்வதற்கான செயற்பாடுகளைத் தீர்மானிக்க உதவும். பிரதானமாக பூமியை நோக்கி வரக்கூடிய சிறு கோள் , asteroid என்ற பாறைகளின் பாதையைத் திசை திருப்ப எந்த மாதிரியான சக்தி அவற்றின் மீது பிரயோகிக்கப்படவேண்டும் என்பதைப் புரிந்துகொள்ளவும் உதவும்’ என்று விஞ்ஞானிகள் சொல்கிறார்கள். இந்த சோதனை ஆஸ்திரேலிய நேரம் 27 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 9:24 இற்கு நிகழவிருக்கிறது.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in
பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில்
செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்
