ஆஸ்திரேலிய சிறப்பு படையினர்(SAS) ஆப்கானிஸ்தானில் போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணைகள் நடைபெற்றுவரும் நிலையில், இதனுடன் தொடர்புடையதாக ABC தொலைக்காட்சி நிகழ்ச்சியில் வெளியான காணொளி தம்மை மனஉளைச்சலுக்கு உள்ளாக்கியுள்ளதாக பாதுகாப்பு துறை அமைச்சர் Linda Reynolds தெரிவித்துள்ளார்.
ABC Four Corners நிகழ்ச்சியில், நிராயுதபாணியாக நிலத்தில் கிடந்த ஆப்கான் நபர் ஒருவரை, ஆஸ்திரேலிய படை வீரர் ஒருவர் 2 மீட்டர் தொலைவில் நின்று சுட்டுக்கொல்வதுபோன்ற காணொளி ஒளிபரப்பப்பட்டது.
இதையடுத்து குறித்த விவகாரம் தொடர்பில் கருத்துவெளியிட்டுள்ள பாதுகாப்பு துறை அமைச்சர் Linda Reynolds, கடந்த 2005 முதல் 2016 வரை ஆப்கானில் நிலைகொண்டிருந்த ஆஸ்திரேலிய சிறப்பு படையினர்(SAS) மேற்கொண்டதாக கூறப்படும் போர்க்குற்ற சம்பவங்கள் குறித்து Inspector-General of the Australian Defence Force (IGADF) -ஆல் மேற்கொள்ளப்படும் முழுமையான விசாரணைக்கு தாம் ஆதரவு வழங்குவதாக தெரிவித்தார்.
மேலும் இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் எழும்போது அவை தொடர்பில் சரியான விசாரணைகள் நடைபெறவேண்டுமென்பதையே நாட்டு மக்கள் எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
ஆஸ்திரேலிய படையினர் மேற்கொண்டதாக கூறப்படும் போர்க்குற்றங்கள் குறித்த விசாரணைக்குழுவின் அறிக்கை விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
