NSW-இல் செப்டம்பர் 17ஆம் திகதி முதல் வாகனம் ஓட்டும் போது கைபேசியை சட்டவிரோதமாக பாவித்தால் அபராதத்துடன் ஐந்து புள்ளிகள் இழப்பீர்கள். முன்னர் நான்கு புள்ளிகளாக இருந்தது தற்போது ஐந்தாக உயர்த்தப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவில் கிட்டத்தட்ட 19 மில்லியன் கைபேசி பாவனையாளர்கள் இருப்பதாகவும் அது 2019ல் 20 மில்லியனை கடக்கக்கூடும் என்று கூறப்படுகிறது. ஆகவே வீதி பாதுகாப்பிற்கான சட்டங்கள் கடுமையாக்கப்படுகின்றன.
வாகனம் ஓட்டும் போது உங்களுடன் பயணிக்கும் மற்றைய பயணியிடம் கொடுப்பதற்கு மட்டுமே நீங்கள் கைபேசியை தொடலாம் மற்றபடி அழைப்பை ஏற்றுக்கொள்ளவோ அல்லது குறுஞ்செய்தி அனுப்பவோ அல்லது சமூக வலைத்தளங்களை பாவிக்கவோ நீங்கள் எக்காரணத்திற்காகவும் வாகனம் ஓட்டும் போது கைபேசியை பாவிக்கக்கூடாது. கைபேசியை தொடாமல் Bluetooth அல்லது குரல் செயல்படுத்தல் மூலம் நீங்கள் அழைப்பை ஏற்றுக்கொள்ளலாம் . ஆனால் அச்சமயம் உங்களின் கைபேசி பாதுகாப்பான முறையில் வாகனத்தில் பொருத்தப்பட்டிருக்க வேண்டும்.
சமிக்ஞை விளக்குகளில்(traffic lights) காத்திருக்கும்போது, அல்லது வாகன நெரிசலில் நிறுத்தும்போது கைபேசியை பாவிப்பது சட்டவிரோதமானது. உங்கள் கைபேசியை நீங்கள் கையிலெடுத்துப் பயன்படுத்த விரும்பினால் உங்கள் வாகனம் போக்குவரத்து பாதையிலிருந்து விலகி சரியான இடத்தில் முற்றாக நிறுத்தப்பட்டிருக்கவேண்டும்.
Learner, P1 மற்றும் P2 லைசென்ஸ் வைத்திருப்பவர்கள் வாகனம் ஓட்டும் போது முற்றிலும் கைபேசியை பாவிக்கவே கூடாது.
