இயந்திர உதிரிப்பாகங்களுக்குள் மறைத்துவைத்து ஆஸ்திரேலியாவுக்குள் போதைப்பொருள் கடத்த முற்பட்ட வெளிநாட்டு மாணவர்கள் நால்வருக்கும் குற்றத்துடன் சம்பந்தப்பட்ட இன்னொருவருக்கும் மெல்பேர்ன் நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்துள்ளது.
12.5kg கொக்கெய்ன் போதைப்பொருளை நாட்டுக்குள் எடுத்துவரமுற்பட்டார்கள் என்ற குற்றச்சாட்டில் கடந்த 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் மூன்று கொலம்பிய மாணவர்களும் ஒரு இத்தாலிய மாணவரும் மெல்பேர்னில் வைத்து கைது செய்யப்பட்டார்கள். இவர்கள் மறைத்துவைத்திருந்த போதைப்பொருட்களும் பொலீஸாரால் கைப்பற்றப்பட்டன. விசாரணைகளை மேற்கொண்டு நடத்தியதில் குற்றவலையமைப்பில் சம்பந்தப்பட்ட இன்னொரு கொலம்பியரும் மெல்பேர்னில் கைதுசெய்யப்பட்டார்.
சர்வதேச ரீதியில் மிகப்பெரியளவில் மேற்கொள்ளப்பட்டுவரும் போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் இந்த மாணவர்கள் இணைந்து செயற்பட்டிருக்கிறார்கள் என்று பொலீஸார் தெரிவித்துள்ளனர்.
இரண்டு வருடங்களாக நடைபெற்ற வழக்கு விசாரணைகளுக்கு பிறகு, நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகையில் - கொலம்பிய மாணவர் ஒருவருக்கு 9 வருட சிறையும் இன்னொருவருக்கு 7 வருட சிறையும் மற்றைய கொலம்பிய மாணவருக்கு நான்கு வருட சிறையும் இத்தாலிய மாணவருக்கு ஐந்தரை வருட சிறையும் வழங்கப்பட்டுள்ளது. குற்றத்துடன் தொடர்புடைய இன்னொரு கொலம்பிய நபருக்கு கடந்த ஜூலை மாதம் 14 வருடங்களும் ஆறு மாத சிறையும் வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
