நவுறு தடுப்பு முகாமில் மரணத்தை எதிர்கொண்டிருக்கும் அகதி ஒருவர், palliative care எனப்படும் நோய்த்தணிப்பு நிவாரணத்தைப் பெறுவதற்காக ஆஸ்திரேலியா வர அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஆப்கான் ஹஸரா பின்னணி கொண்ட 63 வயதான ஆண் ஒருவர் நாட்பட்ட நுரையீரல் புற்றுநோயால் அவதிப்படுவதாகவும், அவர் இன்னமும் சில மாதங்கள் மட்டுமே உயிர்வாழ்வார் எனவும் அகதிகள் செயற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தப்பின்னணியில் குறித்த நபரை ஆஸ்திரேலியா அழைத்துவந்து palliative care வழங்குவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டபோதிலும் அதற்கு அனுமதி மறுத்த ஆஸ்திரேலிய அரசு, வேண்டுமானால் அவரை தாய்வானுக்கு அனுப்பி வைக்கலாம் என்றும் அல்லது அவர் ஆப்கான் திரும்பலாம் என்றும் கூறியதாக Refugee Action Coalition-இன் பேச்சாளர் Ian Rintoul குறிப்பிட்டார்.
குறித்த நபர் உண்மையான அகதி என இனங்காணப்பட்டுள்ளதாகவும், அவரைப் பாதுகாக்கவேண்டிய கடப்பாடு ஆஸ்திரேலியாவுக்கு உள்ளபோதிலும் அதனைத் தட்டிக்கழிப்பது மட்டுமல்லாமல் இறந்துகொண்டிருக்கும் மனிதனின் இறுதி ஆசையைக் கூட நிறைவேற்ற மறுப்பது மனிதாபிமானமற்ற செயல் எனவும் அகதிகள் செயற்பாட்டாளர்கள் கண்டனம் வெளியிட்டுள்ளனர்.
