காட்டுத்தீயினால் ஆஸ்திரேலிய பொருளாதாரத்துக்கு ஏற்பட்டுள்ள இழப்பு இதுவரைக்கும் இருநூறு கோடி டொலர்கள் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இந்த பாதிப்பு இன்னும் அதிகரிக்கலாம் என்றும் எதிர்வுகூறப்பட்டுள்ளது.
நாட்டின் சுற்றுலாத்துறை, விவசாயம் - பண்ணை மற்றும் கைத்தொழில் துறைகளில் காட்டுத்தீ ஏற்படுத்தியுள்ள பாதிப்பு இதுவரைக்கும் இருநூறு கோடியை தாண்டிவிட்டது என்றும் காட்டுத்தீயின் பாதிப்புக்கள் இன்னமும் தொடர்வதால் பேரழிவுகளும் இன்னமும் அதிகரிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காட்டுத்தீ பேரழிவுகள் நாட்டின் மொத்த தேசிய உற்பத்தியை 0.15 சதவீதத்தினால் இந்த நிதியாண்டில் பாதிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
தீயினால் நேரடியாக பாதிக்கப்பட்ட சமூகங்கள் மீண்டும் பழையநிலைக்கு திரும்புவதும் அவர்களது உழைப்பு நாட்டின் பொருளதாரத்துக்கு பங்களிப்பதும் மிகவும் கடினம் என்று கருதப்படுகிறது.
இந்த ஒட்டுமொத்த விளைவுகளால் நாட்டில் செலவீனம் குறைவதற்கான சாத்தியமுள்ளதால், ரிசேர்வ் வங்கி அடுத்த மாதமளவில் வட்டி வீதத்தினை மேலும் குறைப்பதற்கான வாய்ப்புக்கள் உண்டு என்று பொருளியல் நிபுணர்கள் கூறியுள்ளார்கள்.
