சிறுபான்மைஅரசு அமைகிறதா?
வாக்குகள் தொடர்ந்து எண்ணப்பட்டு வருவதால் லேபர் கட்சி அறுதி பெரும்பான்மையுடன் அரசு அமையுமா அல்லது லேபர் தலைமையில் சிறுபான்மை அரசு அமையுமா என்பது விரைவில் தெரியவரும். லேபர் கட்சி ஒருவேளை அறுதிப் பெரும்பான்மை பெறத் தவறினாலும், இக்கட்சி அதிக இடங்களை கைப்பற்றியிருப்பதால் வெற்றி பெற்றிருக்கும் சுயேட்சை நாடாளுமன்ற உறுப்பினர்கள் லேபர் அரசுக்கு ஆதரவு தருவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நேற்று இரவுவரை எண்ணப்பட்ட வாக்குகளின் அடிப்படையில் லேபர் கட்சி 72 இடங்களையும், தற்போதைய ஆளும் கட்சியும், தேர்தலில் தோல்வி கண்டிருக்கும் கட்சியுமான லிபரல்-நேஷனல் கூட்டணிக்கு 52 இடங்களும் கிடைத்துள்ளன. வாக்கு எண்ணிக்கை இன்று காலை மீண்டும் துவங்கியுள்ளது.
நேற்று இரவு நடைபெற்ற தேர்தல் முடிவு குறித்த தனது ஆதரவாளர்கள் கூட்டத்தில் கலந்துகொண்ட பிரதமர் Scott Morrison, ஆளும் கட்சியான லிபரல் கட்சி கண்டிருக்கும் தேர்தல் தோல்வியை ஒத்துக்கொண்டார். லிபரல் கட்சி புதிய தலைமையில் செயல்படும் என்று அவர் அறிவித்தார். பிரதமர் Scott Morrison அரசியலிலிருந்து ஓய்வு பெறுவாரா அல்லது நாடாளுமன்ற உறுப்பினராகத் தொடர்வாரா என்பதை அவர் இதுவரை அறிவிக்கவில்லை.
லிபரல்கட்சியின்அடுத்ததலைவர்யார்?
நாட்டின் கருவூலக் காப்பாளர் Josh Frydenberg அதிர்ச்சி மிக்க தோல்வியை சந்தித்துள்ளதாக நேற்றைய வாக்கு எண்ணிக்கை முடிவு காட்டுகிறது. தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை நடந்துகொண்டிருந்தாலும், அவர் வெற்றி பெறும் வாய்ப்பு குறைவு என்று கருதப்படுவதால் அவர் லிபரல் கட்சியின் தலைமைக்கு தெரிவு செய்யப்படும் வாய்ப்பில்லை என்று பார்க்கப்படுகிறது. இந்த பின்னணியில் தற்போதைய பாதுகாப்புத்துறை அமைச்சரான Peter Dutton புதிய தலைவராக தெரிவுசெய்யப்படலாம் என்று சில ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.
கிரீன்ஸ்கட்சியின்அதீத வளர்ச்சி
நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் கிரீன்ஸ் கட்சி எதிர்பாராத அளவு அதிக வாக்குகளை பெற்றுள்ளது. இறுதி முடிவுகள் முழுமையாகவும் அதிகாரபூர்வமாகவும் அறிவிக்கப்பட சில நாட்கள் ஆகலாம் என்றாலும் கிரீன்ஸ் கட்சிக்கு 14 சதவிகித வாக்குகள்வரை கிடைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த நாடாளுமன்றத்தில் ஒரு உறுப்பினரைக் கொண்டிருந்த கிரீன்ஸ் கட்சி இம்முறை நான்கு இடங்கள்வரை வெல்லக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை இது சாத்தியமாகாமல் போனாலும், கிரீன்ஸ் கட்சிக்கு லேபர் மற்றும் லிபரல் கட்சியின் செல்வாக்குமிக்க Ryan, Griffith தொகுதிகளில் கிடைத்திருக்கும் வாக்குகள் அந்த கட்சியின் அதீத வளர்ச்சியை வெளிப்படுத்துவதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
சுயேசைகளின்ஆதிக்கம்தொடர்கிறது
நடந்து முடிந்த பெடரல் தேர்தலில் சுயேட்சை வேட்பாளர்கள் 11 பேர் வெற்றிபெறக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆஸ்திரேலிய நாடாளுமன்ற வரலாற்றில் இதுவரை இவ்வளவு எண்ணிக்கையில் சுயேட்சைகள் வெற்றி பெற்றதில்லை. தேர்தலுக்கு முன்பிருந்த அல்லது கலைக்கப்பட்ட 46 ஆவது நாடாளுமன்றத்தில் மொத்தமுள்ள 151 இடங்களில் ஆளும் கட்சியாக இருந்த லிபரல் – நேஷனல் கூட்டணிக்கு 75 உறுப்பினர்களும், எதிர்கட்சியான லேபர் கட்சிக்கு 68 உறுப்பினர்களும் இருந்தனர். நாடாளுமன்றத்தில் 4 சுயேட்சை உறுப்பினர்களும், Greens கட்சிக்கு ஒரு உறுப்பினரும், United Australia Partyக்கு ஒரு உறுப்பினரும், Katter’s Australian Partyக்கு ஒரு உறுப்பினரும், Centre Allianceக்கு ஒரு உறுப்பினரும் என்று எட்டுபேர் இருந்தனர். ஆனால் இம்முறை இந்த 14 ஆக உயரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
யார்இந்தTeal வேட்பாளர்கள்?
மெல்பன், சிட்னி நகரங்களில் லிபரல் கட்சியின் அதீத செல்வாக்கு மிக்க தொகுதிகளில் Teal வேட்பாளர்கள் என்று வர்ணிக்கப்படும் சுயேட்சைகள் பலர் வெற்றி பெற்றுள்ளது இந்த தேர்தல் முடிவு தந்திருக்கு ஆச்சரியமும், அதிர்ச்சியும் என்று பார்க்கப்படுகிறது. நிறங்களில் Teal என்று கூறப்படும் நிறம் என்பது, பச்சையும் நீலமும் கலந்த நிறம் ஆகும். கிரீன்ஸ் கட்சியின் (பச்சை நிறம்) காலநிலை மாற்றம் தொடர்பான கொள்கையையும், லிபரல் கட்சியின் (நீல நிறம்) பொருளாதாரம் உள்ளிட்ட பல கொள்கைகளையும் கலந்து இந்த வேட்பாளர்கள் முன்வைப்பதால் இந்த வேட்பாளர்கள் Teal வேட்பாளர்கள் என்று வர்ணிக்கப்படுகின்றனர். இவர்கள் பெரும் வெற்றிபெற்றிருப்பது முக்கியத்துவம் மிக ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.
மெல்பன், சிட்னி நகரங்களில் லிபரல் கட்சியின் அதீத செல்வாக்கு மிக்க தொகுதிகளை லிபரல் கட்சி Teal வேட்பாளர்களிடம் இழந்துள்ளது. குறிப்பாக, மெல்பனின் Kooyong தொகுதியில் Monique Ryan நாட்டின் கருவூலக் காப்பாளரும், லிபரல் கட்சியின் அடுத்த தலைவர் என்று பார்க்கப்படுகின்றவருமான Josh Frydenberg ஐ தோற்கடிப்பார் என்று வாக்கு எண்ணிக்கை முடிவு காட்டுகிறது. முன்னாள் பிரதமர் Tony Abbot தோல்வி கண்ட பலராலும் எதிர்ப்பார்க்கப்பட்ட சிட்னியின் Warringah தொகுதியின் சுயேட்சை நாடாளுமன்ற உறுப்பினர் Zali Steggall தொகுதியை தக்கவைத்துக்கொண்டு நாடாளுமன்ற உறுப்பினராக தொடர்கிறார். அவர் லிபரல் கட்சியின் சர்ச்சைக்குரிய வேட்பாளர் Katherine Devesஐ தோற்கடித்தார். சிட்னி பெருநகரின் Wentworth தொகுதியில் இந்திய பின்னணி கொண்ட Dave Sharmaவை சுயேட்சை வேட்பாளர் Allegra Spender தோற்கடித்துள்ளார் என்று இதுவரை எண்ணப்பட்ட வாக்குகளின் முடிவுகள் காட்டுகின்றன.
செனட்அவைதேர்தல்முடிவுஎன்ன?
செனட் அவையில் மொத்தமுள்ள 76 இடங்களில் நேற்று நடந்து முடிந்த தேர்தல் மூலம் 40 செனட்டர்கள் தெரிவு செய்யப்படுகின்றனர். ஆனால் இந்த வாக்கு எண்ணிக்கையின் முடிவுகள் முழுவதும் அல்லது தெளிவாக அறியவருவதற்கு பல நாட்கள் ஆகலாம் என்று நம்பப்படுகிறது. செனட் முடிவுகள் விருப்பு வாக்கு அடிப்படையில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் எனபதால் முடிவுகள் உறுதி செய்யப்பட மேலும் சில நாட்கள் ஆகலாம் என்று கருதப்படுகிறது.
வெளிவந்துகொண்டிருக்கும் செனட் வாக்கு எண்ணிக்கை முடிவுகளின் அடிப்படையில் குயின்ஸ்லாந்து மாநிலத்தில் கிரீன்ஸ் கட்சி 14 சதம் வாக்குகள் வரை பெறக் கூடும் என்று கருதப்படுவதாலும், Pauline Hanson தலைமையிலான One Nation கட்சிக்கு 7 சதம் வாக்குகள் வரை கிடைக்கக்கூடும் என்று கருதப்படுவதாலும், Pauline Hanson தனது செனட் உறுப்பினராக தெரிவாகும் வாய்ப்பு குறைவு என்றும், கிரீன்ஸ் கட்சி ஒரு செனட் உறுப்பினரை இம்மாநிலத்தில் பெறக்கூடுமென்றும் அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.
பல்லின கலாச்சார ஆஸ்திரேலியாவும் அமையவிருக்கும் நாடாளுமன்றமும்
கடந்த நாடாளுமன்றத்தொடு ஒப்பிட்டால் இம்முறை குடியேற்றவாசிகள் பின்னணிகொண்ட சமூகங்களைச் சார்ந்த பலர் இந்த தேர்தலில் வெற்றிபெற்றுள்ளனர். Anthony Albanese இத்தாலிய பின்னணி கொண்டவர். இதன்மூலம் நாட்டில் முதன்முறையாக Anglo-Celtic பூர்வீகப் பின்னணி இல்லாத ஒருவர் பிரதமராக பதவி ஏற்கிறார்.
மேலும் சிட்னி பெருநகரின் Reid தொகுதியில் Lao நாட்டிலிருந்து வந்த சீனப் பின்னணிகொண்ட பெற்றோரின் மகளான Sally Sitou லேபர் கட்சியின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினராவது, Fowler தொகுதியில் வியட்னாமிய பின்னணி கொண்ட Dai Li சுயேட்சை உறுப்பினராக வெற்றிபெறுவது, மெல்பனின் Higgins தொகுதியில் தமிழ் பின்னணி கொண்ட Dr.Michelle Ananda-Rajah லேபர் கட்சியின் சார்பில் வெற்றிபெறுவது முக்கியத்துவம் மிக்க ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.
