Minnie, Beulah, மற்றும் Karen என்ற பெயர் கொண்ட மூன்று யானைகளின் சார்பாக The Nonhuman Rights Project (NhRP) என்ற மனிதரல்லாதவரின் உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கும் அமைப்பு வழக்கு பதிவு செய்துள்ளது. காடுகளில் பிறந்த இந்த மூன்று யானைகளும் 36 முதல் 50 வயது வரையுள்ளவை.
"இந்த யானைகள் சிறை வைக்கப்பட்டுள்ளமை, அவற்றின் உரிமைகளை மீறுகிறது. மனிதர்கள் போல, இந்த யானைகளுக்காக இன்னொரு மனிதர் வாதாட சட்டத்தில் 'habeas corpus' என்ற உரிமை வழங்கப்பட வேண்டும்" என்று, வழக்குப் பதிவு செய்துள்ள NhRP அமைப்பை நிறுவிய Steven Wise வாதாடுகிறார்.
பல பரிமாணங்களில் மனிதர் போல் அறிவுடைய, மற்றும் சமூக திறன்களையுடைய யானைகள் போன்ற விலங்குகள், சட்டத்தின் கீழ் "பொருட்கள்" எனக் கருதப்படக்கூடாது என்று வாதிடும் Steven Wise, "பொருட்களுக்கு எந்தவொரு சட்டபூர்வ உரிமையும் இல்லை" என்பதால், அதற்குப் பதிலாக, யானைகளுக்கு "நபர்" என்ற திறனைக் கொடுக்குமாறு நீதிமன்றத்திற்கு அழுத்தம் கொடுக்கிறார்.
ஆனால், "யானைகளுக்கு முழுமையான மனித உரிமைகள் தேவை" என்று தான் வாதிடவில்லை என்றும் Steven Wise கூறுகிறார்.
"நாம் தேடும் ஒரே விஷயம், உடல்நலம் குறித்த சுதந்திரத்தின் ஒற்றை உரிமையாகும், இது habeas corpus மூலமாக பாதுகாக்கப்படுகிறது," என்று Steven Wise மேலும் கூறினார்.
NhRP என்ற குழு, R.W. Commerford and Sons Traveling Zoo என்ற மிருகக்காட்சிச் சாலையிலுள்ள மூன்று யானைகளை அங்கிருந்து அகற்றி, ஒரு சரணாலயத்திற்கு அழைத்துச் செல்லப்பட வேண்டும் என்று கோருகிறது.
இந்த மிருகக்காட்சிச் சாலை, Animal Welfare Act என்ற விலங்கு நலச் சட்டத்தை, குறைந்தது 50 தடவைகளுக்கு மேல் மீறியுள்ளது என்று NhRP கண்டறிந்துள்ளது.
அவற்றில், பொதுமக்கள் யானைகளுக்கு அருகில் செல்ல அனுமதிக்கப்படும் போது, பயிற்றப்பட்ட ஊழியர்கள் அருகில் இருக்க வேண்டும், யானைகளின் தலையில் necrotic skin எனப்படும் சருமத்தின் இழைய நசிவிற்குப் போதுமான சிகிச்சையளிப்பதில்லை, இந்த மூன்று யானைகளும் வசிக்குமிடத்தில் போதியளவு வடிகால் அமைக்கப்படவில்லை என்பனவும் அடங்கும்.
25 வருடங்களுக்கும் மேலாக Steven Wise விலங்குகளின் உரிமைகளுக்காகக் குரல் கொடுத்து வருவது, 2016ம் ஆண்டு HBO வெளியிட்ட "Unlocking the Cage" என்ற ஆவணப்படத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளது.
இப்படியான வழக்கு, முதல் தடவையாகத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்று சொல்வதற்கில்லை. நியூயார்க்கில் வசிக்கின்ற Kiko மற்றும் Tommy என்ற இரண்டு சிம்பன்ஸி சார்பாக, 'habeas corpus' என்ற உரிமை கோரி Steven Wise வழக்குத் தாக்கல் செய்திருந்தார். ஆனால், கடந்த ஜூன் மாதம், ஒரு நியூயார்க் நீதிபதி அந்த வழக்கைத் தள்ளுபடி செய்திருந்தார். அந்த வழக்கு இப்பொழுது மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது.
இருந்தபோதிலும், உலகெங்கிலுமுள்ள மற்ற இடங்களில் விலங்குகளின் உரிமைகளில் சிறிய முன்னேற்றத்தைக் காணலாம் என்று, 2016ம் ஆண்டு நவம்பர் மாதம் ஆர்ஜென்டீனா நாட்டில், Cecilia என்ற சிம்பன்ஸி சார்பாக, 'habeas corpus' என்ற உரிமை கோரி தொடுக்கப்பட்ட வழக்கில் சிம்பன்ஸிக்கு ஆதரவாக நீதிபதி தீர்ப்பு வழங்கியதைச் சுட்டிக்காட்டி, தனக்கு நம்பிக்கை இருக்கிறது என்கிறார் Steven Wise.
மேலதிக விபரங்களுக்கு இங்கே சொடுக்கவும்.
