கொரோனா பேரிடர் காரணமாக நாட்டுக்கு வரமுடியாமல் வெளிநாடுகளில் சிக்கியுள்ள சுமார் இரண்டாயிரத்து 727 ஆஸ்திரேலியர்களின் மின்னஞ்சல் விவரங்களை ஆஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சு (Department of Foreign Affairs and Trade) தவறுதலாக வெளியிட்டுவிட்டது.
இவ்வாறு தனிநபர் விவரத்தை கசியவிட்டது தொடர்பில் ஆஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சு, குறிப்பிட்ட மின்னஞ்சல் உரிமையாளர்களிடம் மன்னிப்பு கோரியுள்ளது.
கொரோனா பேரிடர் காரணமாக நாடு திரும்ப முடியாமல் வெளிநாடுகளில் சிக்கியுள்ள ஆஸ்திரேலியர்களை தொகுதி தொகுதியாக அழைத்துவருவதற்கான ஏற்பாடுகளை ஆஸ்திரேலிய அரசு மேற்கொண்டுவருகிறது.
இவ்வாறு நாடு திரும்ப உதவி கோரிய இரண்டாயிரத்து 727 ஆஸ்திரேலியர்களுடனான தொடர்பாடலின்போது ஆஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சு அனைவரினது மின்னஞ்சல்களையும் வெளியிட்டுவிட்டது.
பாதிக்கப்பட்ட ஆஸ்திரேலியர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பியபோது, Bcc என்ற பெட்டியினுள் மின்னஞ்சல் முகவரிகளை போடுவதற்கு பதிலாக To என்ற பெட்டியினுள் போட்டுவிட்டதால் எல்லோருக்கும் இந்த தகவல் அம்பலமாகும்வகையில் சென்றடைந்துள்ளது.
இது விடயம் தொடர்பில் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்புகொண்டு மன்னிப்புக்கோரியதுடன், எதிர்காலத்தில் இவ்வாறு நடைபெறாது கவனித்துக்கொள்வதாக உறுதியளித்துள்ளது.
