ஆஸ்திரேலியா வருவதற்கு முன்னர் இந்தியாவில் ஆங்கிலம் கற்பித்த பெண்ணொருவர் ஆஸ்திரேலிய நிரந்தர வதிவிட உரிமைக்கு விண்ணப்பிக்க தகுதிபெறுவதற்கான ஆங்கிலப்பரீட்சையை 67 ஆவது தடவையின் பின்னர் சித்தியடைந்திருக்கிறார்.
இந்தியாவில் கணக்கியல் பட்டப்படிப்பை நிறைவு செய்த குறிப்பிட்ட பெண்மணி மேற்படிப்புக்காக தனது கணவருடன் கடந்த 2013 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு வந்தார். தனது நிரந்தர வதிவிட உரிமைக்கு விண்ணப்பிப்பதற்காக இரண்டு வருடங்களாக PTE ஆங்கிலப்பரீட்சை எழுதினார்.
ஒவ்வொரு தடவையும் 340 டொலர்களை செலுத்தி பரீட்சைக்குத்தோற்றியபோதும் சித்தியடைவில்லை. பரீட்சைக்கான வகுப்புக்கள், பரீட்சை என்று சுமார் 35 ஆயிரம் டொலர்கள் செலவு செய்து 68 ஆவது தடவைதான் ஆங்கிலப்பரீட்சையில் சித்தியடைந்துள்ளார். இப்பரீட்சைக்குத் தயாராவதற்காக அவர் தனது வேலையையும் விடவேண்டியிருந்தது.
நிரந்தர வதிவிட உரிமைக்கு விண்ணப்பிக்கும்போது ஆங்கிலப்பரீட்சையில் சித்தியடைவதன் மூலம் 20 புள்ளிகளை பெற்றுக்கொள்ளமுடியும். அதேவேளை, அந்தப்பரீட்சை நிரந்தர வதிவிட உரிமையை பெற்றுக்கொள்வதற்கு ஆஸ்திரேலிய அரசினால் முன்வைக்கப்படும் முக்கிய குடிவரவு நிபந்தனையும்கூட. ஆகவே, குடிவரவாளர்களுக்கு இது மிகப்பெரிய தடையாக உள்ளது என்று பாதிக்கப்படுபவர்கள் கூறுகிறார்கள்.
தான் தொடர்ச்சியாக பரீட்சையில் தோல்வியடைந்தபோதும் தனக்கு நம்பிக்கையூட்டி இறுதியில் சித்தியடைவதற்கு பெருந்துணை புரிந்தவர் தனது கணவனே என்று குறிப்பிட்ட பெண்மணி கூறியுள்ளார். மேலும் வதிவிட உரிமை பெறுவதற்கு ஆங்கிலப்புலமையை நிரூபிக்க வேண்டுமென்ற ஆஸ்திரேலிய அரசின் நிபந்தனையினால், தன்னைப்போன்ற பலர் மிகுந்த பாதிப்புக்குள்ளாவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
