ஆஸ்திரேலியாவுக்கு படகில் வந்த அகதிகளின் விசா விண்ணப்பங்களை அதிவேக பரிசீலனை செயன்முறையின் கீழ் (fast-tracked processing) முடிவெடுப்பதற்கு லிபரல் அரசு கொண்டுவந்த விசேட சட்டத்தை மீளப்பெறும் முயற்சி நாடாளுமன்ற செனட் அவையில் தோல்வியடைந்துள்ளது.
கடந்த 2012 ஆம் ஆண்டுக்கும் 2014 ஆம் ஆண்டுக்கும் இடையில் படகுகள் மூலம் ஆஸ்திரேலியாவுக்கு வந்த சுமார் 30 ஆயிரத்து 500 அகதிகளின் விசா விண்ணப்பங்கள் தொடர்பில் விரைவாக பரிசீலனை செய்து முடிவெடுப்பதற்காக fast-tracked processing நடைமுறையை கடந்த 2015ம் ஆண்டு அரசு அறிமுகம் செய்திருந்தது.
இந்நடைமுறையினை சற்றுமேம்படுத்தி தற்காலிக பாதுகாப்பு விசா மற்றும் SHEV போன்றவற்றுக்கு விண்ணப்பித்தவர்களையும் இதேநடைமுறையின் கீழ் பரிசீலிப்பதற்கு அரசு முடிவெடுத்திருந்தநிலையில் அதற்கு லேபர் மற்றும் கிரீன்ஸ் கட்சிகள் எதிர்ப்பு வெளியிட்டதுடன் இதை நாடாளுமன்றில் தோற்கடிப்பதற்கான முயற்சிகளில் இறங்கின.
அரசின் இச்சட்டத்தைக் மீளப்பெறுவதற்கென கிரீன்ஸ் கட்சி, நாடாளுமன்ற செனட் அவையில் முன்வைத்த disallowance motion 33-31 என்ற வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டது. லிபரல் அரசு வெற்றிபெற்றிருக்கிறது.
இந்த புதிய சட்டத்தின் கீழ் குடிவரவு திணைக்களத்தினால் பரிசீலனை செய்து முடிவெடுக்கப்பட்டு அறிவிக்கப்படும் அகதிகளுக்கு மேன்முறையீடு செய்யும் வாய்ப்பு மட்டுப்படுத்தப்பட்டது என்றும் அவர்களது விண்ணப்பங்களை வேண்டுமென்று நிராகரிப்பதற்காகத்தான் இந்த சட்டமே கொண்டுவரப்பட்டிருக்கிறது என்றும் கிறீன்ஸ் செனட்டர் Nick Mckim கூறியிருக்கிறார்.
இதேவேளை முடிவெடுக்கப்படாத நிலையில் குடிவரவு திணைக்களத்தில் தொடர்ந்தும் தேங்கியுள்ள விசா விண்ணப்பங்கள் தொடர்பில் விரைவாக முடிவெடுப்பதற்காகவே அரசு முயற்சிப்பதாகவும் இச்சட்டத்திற்கு முட்டுக்கட்டை போட்டால் 24 நாட்களில் பரிசீலித்து முடிக்கப்படும் ஒரு விண்ணப்பம் 504 நாட்களாக தேங்கிக்கிடக்கும் நிலை ஏற்படும் என குடிவரவு அமைச்சர் David Coleman தெரிவித்தார்.
