சிட்னியில் நேற்று தனது இரு பிள்ளைகளைச் சுட்டுக்கொன்ற தந்தை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சிட்னி Pennant Hills பகுதியில் தமது படுக்கையறைகளிலிருந்த 15 வயது மகன் மற்றும் 13 வயது மகளை சுட்டுக்கொன்ற 68 வயது நபர் அங்கிருந்து தப்பிச் சென்றிருந்தார்.
இதையடுத்து குறித்த நபரைத் தேடும் பணி பல மணிநேரங்களாக இடம்பெற்றிருந்த நிலையில் இன்று Normanhurst பகுதியில் அவரது சடலம் மீட்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சடலத்திற்கருகில் மீட்கப்பட்ட இரு கைத்துப்பாக்கிகளும் தனது பிள்ளைகளைக் கொல்லப் பயன்படுத்தியவை என தெரிவித்த காவல்துறையினர் இக்கொலைகள் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட ஒன்று கூறியுள்ளனர்.
குறித்த நபர் தனது பெயரில் இரு கைத்துப்பாக்கிகளையும் சட்டரீதியாகவே வாங்கியிருந்ததாகவும் இதற்கு முன்னர் அவர் எவ்வித குற்றச்செயல்களில் ஈடுபட்டதற்கான ஆதாரங்களோ குடும்பவன்முறைக்கெதிரான தடையுத்தரவோ இந்நபர் மீது விதிக்கப்பட்டிருக்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் இரு பிள்ளைகளுடனும் தாயாருடனும் குறித்த நபர் வாழ்ந்திருக்கவில்லை எனக் குறிப்பிட்ட காவல்துறையினர், ஒரே நேரத்தில் தனது இரு பிள்ளைகளையும் இழந்த தாய் கடும் அதிர்ச்சியில் உள்ளதாக கூறியுள்ளனர்.
