விக்டோரிய பொலீஸின் தொடர்பிலக்கத்தை பிரதியெடுத்துள்ள இணைய குற்றவாளிகள் அதிலிருந்து அழைத்து அப்பாவிகளிடம் பணம் பறிக்கும் நூதனத்திருட்டில் இறங்கியுள்ளதாகவும் இவ்வாறு தங்களை பொலீஸார் என்று அடையாளப்படுத்திக்கொண்டு தொலைபேசியில் அழைத்து பணம் கோருபவர்களிடம் ஏமாறவேண்டாம் என்றும் விக்டோரிய பொலீஸார் எச்சரித்துள்ளனர்.
பணம் செலுத்தாவிட்டால் கைது செய்யப்படுவார்கள் என்று பொலீஸாரைப்போல பேசி பணம் பறித்த இரண்டு சம்பவங்கள் கடந்த டிசெம்பர் 18 ஆம் திகதி மெல்பேர்னில் இடம்பெற்றிருப்பதாகவும் இந்தப்போலி ஆசாமிகளிடம் அப்பாவிகள் சுமார் முப்பதினாயிரம் டொலர்கள்வரை இழந்துள்ளார்கள் என்றும் தெரியவந்திருக்கிறது.
வரிமோசடி இழைத்ததாக கூறி பணம் பறிப்பதே இந்தக்கும்பலின் பாணி என்றும் இவ்வாறான காரணத்தோடு தொலைபேசி மூலம் அழைப்பெடுத்தாலோ மின்னஞ்சல் அனுப்பினாலோ ஏமாறிவிடவேண்டாம் என்றும் இது தொடர்பில் 1800 333 000 என்ற இலக்கத்துக்கு அழைத்து முறைப்பாடு செய்யும்படியும் விக்டோரிய பொலீஸார் கோரியுள்ளனர்.
