தனது வீட்டின் பின்புற காணியிலிருந்து பாரம்பரிய தவளையினங்களைப் பிடித்து இணையத்தின் ஊடாக விற்பனை செய்தவரை கண்டுபிடித்து பொலீஸார் அபராதம் விதித்துள்ளார்கள்.
இந்த சம்பவம் குயின்ஸ்லாந்தில் இடம்பெற்றுள்ளது.
குறிப்பிட்ட நபர் குயின்ஸ்லாந்து நிலத்தின் பாரம்பரிய தவளையினங்களை பிடித்து, இணையத்தின் ஊடாக தொடர்ச்சியாக விற்பனை செய்துவந்ததை அவதானித்த தபால் விநியோகத்தர்கள் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு முறைப்பாடு செய்துள்ளார்கள்.
இதனையடுத்து மேற்கொண்ட விசாரணைகளின் ஊடாக தவளைகளை விற்பனை செய்துவந்த நபரைக்கண்டுபிடித்த பொலீஸார் அவருக்கு 4401 டொலர்களை அபராதமாக விதித்துள்ளார்கள். கைப்பற்றப்பட்ட தவளைகள் விடுதலை செய்யப்பட்டுள்ளன.
பாரம்பரிய உயிரினங்களை அனுமதியின்றி பிடித்து விற்பது மற்றும் வணிக நோக்கத்துக்கு பயன்படுத்துவது போன்ற நடவடிக்கைகள் சட்டவிரோதமானது என்பதை பொதுமக்கள் கவனத்தில்கொள்ளவேண்டும் என்றும் பொலீஸார் எச்சரித்துள்ளனர்.
