கொரோனா பரவலைத் தடுப்பதற்கென நடைமுறையில் உள்ள கட்டாய தனிமைப்படுத்தல் விதியை மீறிய குற்றச்சாட்டில் மேற்கு ஆஸ்திரேலியாவில் நபர் ஒருவர் சிறைவைக்கப்பட்டுள்ளார்.
இக்குற்றத்துக்காக சிறைவைக்கப்பட்டுள்ள முதல் ஆஸ்திரேலியர் இவராவார்.
Jonathan David என்ற 35 வயது நபர் விக்டோரியாவிலிருந்து பெர்த்துக்கு சென்றிருந்தநிலையில் அம்மாநில விதிகளின் படி 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்காக குறித்த நபர் Travelodge ஹோட்டலுக்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்தார்.
எனினும் இந்நபர் பலதடவைகள் அங்கிருந்து இரகசியமாக வெளியேறி பொதுப்போக்குவரத்தைப் பயன்படுத்திச்சென்று தனது காதலியைச் சந்தித்திருக்கிறார்.
இச்செயற்பாடு கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து குறித்த நபர் மீது இருபிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
இவரது குற்றத்திற்கு ஆறரை மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டபோதும் நிபந்தனை அடிப்படையில் இத்தண்டனை குறைக்கப்பட்டு தற்போது ஒரு மாதம் இவர் சிறையிலிருக்க வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளதுடன் இரண்டாயிரம் டொலர்கள் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
