காட்டுத்தீ அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்வதற்கு படையெடுத்துவருபவர்கள் கொண்டுவரும் பொருட்களினால் இடர் முகாமைத்துவ தரப்புக்கள் திணறிக்கொண்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
காட்டுத்தீயோடு சேர்ந்து தாங்கள் முகங்கொடுக்கும் இன்னொரு சிக்கல் இது என்கிறார் பேரிடர் முகாமைத்துவ அணிப்பேச்சாளர் Jeremy Hillman.
பொதுமக்கள் பெருந்தன்மையுடைவர்கள். நல்ல மனம் படைத்தவர்கள். உதவி செய்யும் உள்ளம் கொண்டவர்கள். அந்தக்காருண்ய குணத்தை குறை சொல்லவில்லை. ஆனால், அனர்த்தம் நடந்த நாள் முதல் தங்கள் வாகனங்களில் உடைகள், சிறுவர்களுக்கான விளையாட்டுப்பொருட்கள், உணவுப்பொட்டலங்கள் என்று எல்லாவற்றையும் கொண்டுவந்து குவித்துவிட்டுப்போவது தமக்கு பெரும் சிரமமாக உள்ளதாக Jeremy Hillman கூறியுள்ளார்.
'நியூ சவுத் வேல்ஸில் உதவிப்பொருட்களை கொண்டுவந்து தருவதால் பெரிய பெரிய மண்டபங்கள் எல்லாம் நிரம்பி வழிகின்றன. விக்டோரியாவின் Gippsland மக்களுக்கு இதுவரை பத்தாயிரம் ஆப்பிள்கள் வந்து சேர்ந்திருக்கின்றன. பாதிக்கப்பட்டவர்களின் உணவுத்தேவைகளை பேரிடர் முகாமைத்துவ குழுவினர் நேர்த்தியாக பூர்த்திசெய்துவருகிறார்கள். குறிப்பிட்ட சில இடங்களில் உள்ளவர்களுக்கு மாத்திரமே உணவு மற்றும் உடை போன்றவை தேவைப்படுகிறது. பாதிக்கப்பட்டவர்களுக்கு மிகமுக்கிய தேவையாக உள்ளது பணம் மாத்திரமே. ஆகவே, உதவி செய்யவிரும்புகின்றவர்கள் பணத்தை கொடுங்கள்'- என Jeremy Hillman கூறியுள்ளார்.
