கட்டாய திருமணத்திற்காக இலங்கைக்கு அழைத்துச்செல்லப்படவிருந்த பெண் ஒருவர் இறுதிநேரத்தில் விமானத்தில் வைத்து ஜேர்மன் பொலிஸாரால் மீட்கப்பட்டதாக DW ஊடகம் செய்திவெளியிட்டுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை பிற்பகல் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த பெண்ணின் விருப்பத்திற்கு மாறாக அவரைத் திருமணம் செய்துகொடுக்கும் நோக்கில் அவரது குடும்பத்தினர் அப்பெண்ணையும் அழைத்துக்கொண்டு இலங்கை செல்வதற்காக விமானமேறினர்.
ஆனால் இவர்கள் விமானத்தில் ஏறுவதற்கு சற்றுமுன்பாக அப்பெண்ணை அவதானித்த Düsseldorf விமான நிலைய பொலிஸ் அதிகாரி ஒருவர் ஏதோ தவறு நடப்பதாக ஊகித்து குறித்த விமானத்திற்குள் சென்ற விமானியின் அனுமதியைப் பெற்று அப்பெண்ணுடன் சென்று பேசியிருக்கிறார்.
அப்போது அந்தப்பெண் தன்னுடைய விருப்பத்திற்கு மாறாக யாரோ ஒருவருக்கு தன்னை மணம்முடித்துக்கொடுப்பதற்காக குடும்பத்தினர் வலுக்கட்டாயமாக அழைத்துச்செல்வதாக கூறியிருக்கிறார்.
அதன் பின் உடனடியாக அப்பெண்ணை அழைத்துச்சென்ற பொலிஸ் அதிகாரி பெண்களுக்கு புகலிடம் வழங்கும் இடம் ஒன்றில் ஒப்படைத்திருக்கிறார்.
பாதுகாப்பு காரணங்களுக்காக 21 வயதுடைய அப்பெண்ணின் பெயர் மற்றும் ஏனைய விபரங்கள் வெளியிடப்படவில்லை.
