மெல்பேர்னில் நான்கு பொலீஸாரின் உயிர்களை காவுகொண்ட விபத்துடன் தொடர்புடைய truck ஓட்டுனர் இந்தியப்பின்னணி கொண்டவராக இருக்கலாம் என்று இன்று வெளியான பொலீஸ் தரப்பு தகவல்களை மேற்கோள்காட்டி செய்தி வெளியாகியுள்ளது.
குறித்த ஓட்டுனர் Medical episode-மருத்துவ அவசர நிலையொன்றை எதிர்கொண்டு தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருவதாகவும் அவரிடம் வாக்குமூலத்தை பெற்றுக்கொள்வதற்கு தாங்கள் காத்திருப்பதாகவும் விசாரணைகளை மேற்கொண்டுவரும் பொலீஸார் தெரிவித்துள்ளனர்.
அதேநேரம் மருத்துவ அவசர நிலையால் குறித்த ஓட்டுனர் blackout எனப்படும் நிலையை அடைந்ததால் கட்டுப்பாட்டை இழந்து விபத்து நேர்ந்திருக்கலாம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
பல்வேறு குற்றச்செயல்களுடன் சம்பந்தப்பட்டவர் என்று கூறப்படுகின்ற வீடு மற்று கடன் முகவர் ஒருவர் Porsche காரில் மிகவேகமாக சென்றுகொண்டிருந்தபோது அவரை மறித்து சோதனை செய்துகொண்டிருந்தபோதே அப்பகுதியில் வேகமாக வந்த குறிப்பிட்ட truck பொலீஸார் மீது மோதி இந்த விபத்து இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
காரில் வந்த நபர் 2008 இல் பொலீஸாரின் மீது தாக்குதல் நடத்தியதற்காக எட்டு மாதங்கள் சிறைவைக்கப்பட்டவர் என்றும் கடந்த காலங்களில் சுமார் 13 தடவைகள் பல்வேறு குற்றங்களுக்காக தண்டிக்கப்பட்டவர் என்றும் தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தவர் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இவர் நேற்றையதினம் Porsche காரில் Eastern அதிவேக நெடுஞ்சாலையில் 140km/h வேகத்தில் சென்றுகொண்டிருந்தபோது பொலீஸாரினால் மறித்து சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாகவும், இவர் போதைப்பொருள் பாவித்திருந்தமை இச்சோதனையின்போது தெரியவந்திருந்ததாகவும் குறிப்பிடப்படுகிறது.

பொலீஸாரினால் விசாரிக்கப்பட்டுக்கொண்டிருந்த இந்நபர் விபத்து இடம்பெற்றவுடன் அந்த இடத்திலிருந்து தப்பியோடிவிட்டார் என்றும் ஒடுவதற்கு முன்னர் விபத்தை தனது தொலைபேசியினால் படமெடுத்துச்சென்றிருக்கிறார் என்றும் கூறப்படுகிறது. பின்னர் அந்தப்படங்களை அவர் தனது முகநூலில் பதிவேற்றியிருக்கிறார் என்றும் பொலீஸார் தரப்பில் கூறப்படுகிறது.
குறிப்பிட்ட நபரை உடனடியாக கைதுசெய்யமுடியாதுபோன பொலீஸார் தம்மிடம் வந்து சரணடையுமாறு நேற்று பகிரங்க அறிவிப்பு விடுத்திருந்தநிலையில் இன்று கைதுசெய்யப்பட்ட குறிப்பிட்ட நபர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுவருகிறார்.
Truck ஓட்டுநர் மெல்பேர்ன் பகுதியைச் சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது. அவரது வீட்டில் சென்று பொலீஸார் சோதனை நடத்தியுள்ளார்கள். பல்கலைக்கழகத்தில் கல்விகற்கும் குறிப்பிட்ட Truck ஓட்டுனரின் மகனிடம் சம்பவம் தொடர்பாக ஊடகங்கள் கேட்டபோது அவர் எந்தப்பதிலும் கூறமறுத்துவிட்டார்.
இதேவேளை சம்பவத்தில் பலியான நான்கு பொலீஸாரில் ஒருவர் பயிற்சிக்காலத்தை நிறைவுசெய்துகொண்டு கடந்த செவ்வாய்க்கிழமைதான் கடமையை ஆரம்பித்தவர் என்று கூறப்படுகிறது.

இது ஒருபுறமிருக்க உயிரிழந்த பொலீஸாருக்கு பிரதமர் ஸ்கொட் மொறிஸன் முதற்கொண்டு பல்வேறு அரசியல்தலைவர்களும் அஞ்சலி தெரிவித்துள்ளனர்.
தற்போதைய கொரோனா காலகட்ட கட்டுப்பாடுகள் காரணமாக நான்கு பொலீஸாரினதும் இறுதிநிகழ்வுகள் பெரியளவில் நடைபெறாது என்றும் அவர்களது சேவை எப்போதும் நினைவு கூரப்படும் என்றும் பொலீஸார் கூறியுள்ளார்கள்.
1878 ஆம் ஆண்டு Mansfield பகுதியில் ஒரே சம்பவத்தில் மூன்று பொலீஸார் படுகொலைசெய்யப்பட்டதற்கு பிறகு விக்டோரியாவில் ஒரே சம்பவத்தில் பொலீஸாருக்கு ஏற்பட்ட பெரிய எண்ணிக்கையிலான உயிரிழப்பு இதுவென்று ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
