சிறுவர்களை பாலியல் துன்புறுத்தலுக்குள்ளாக்கிய வழக்கில் 6 வருட சிறைத்தண்டனை பெற்ற ஆஸ்திரேலியாவின் மிக மூத்த கத்தோலிக்க கார்டினல் George Pell தண்டனையிலிருந்து விடுவிக்கப்படுகிறார்.
George Pell தனக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கெதிராக உயர்நீதிமன்றில் மேன்முறையீடு செய்திருந்தநிலையில் 7 பேர் அடங்கிய நீதிபதிகள் குழு இவர் குற்றமற்றவர் என ஏகமனதாகத் தீர்மானித்து இவருக்கு வழங்கப்பட்ட தீர்ப்பினையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
மெல்பேர்ன் St.Patricks தேவாலயத்தில் சுமார் 23 ஆண்டுகளுக்கு முன் இரு 13 வயது சிறுவர்களை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கினார் என்ற குற்றச்சாட்டில், George Pell 5 பிரிவுகளின் கீழ் குற்றவாளி என இனங்காணப்பட்டு 6 வருட சிறைத்தண்டனை மெல்பேர்ன் County court தலைமை நீதிபதி Peter Kidd-ஆல் அறிவிக்கப்பட்டது.
இதன்படி George Pell அவர்களின் உடல்நிலை, வயது, அவர் இழைத்த குற்றத்தின் தீவிரத்தன்மை உள்ளிட்ட பல அம்சங்களின் அடிப்படையில் அவருக்கு 6 வருட சிறைத்தண்டனை விதிப்பதாகவும், ஆகக்குறைந்தது 3 வருடங்கள் 8 மாதங்களுக்கு அவர் பரோலில் வெளிவரமுடியாது என்றும் நீதிபதி தெரிவித்திருந்தார்.
இதைத்தொடர்ந்து கடந்த ஆண்டு பெப்ரவரி முதல் இவர் சிறைவாசம் அனுபவித்துவந்தார்.
எனினும் தான் நிரபராதி என தொடர்ந்தும் தெரிவித்துவந்த 78 வயதான George Pell, இத்தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு செய்திருந்த பின்னணியில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. உயர் நீதிமன்றின் தீர்ப்பே இறுதியானதாகும்.
