மெல்பேர்னில் கடந்த ஆண்டு, போதைப்பொருள் உட்கொண்ட நபர் ஒருவர், அதிவேகத்துடன் காரை ஓட்டிச் சென்று விபத்தை ஏற்படுத்தியதில், தமிழர் ஒருவர் கொல்லப்பட்டிருந்த நிலையில், அந்நபர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
49 வயதான கணக்காளரும், இரு பிள்ளைகளின் தந்தையுமான உதயணன் என்பவர், கடந்த நவம்பர் 18ம் திகதி அதிகாலை 1.50 மணியளவில் தனது Mercedes காரில், Glen Waverley பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது, அப்பகுதியால் Mazda காரில் வந்த 33 வயது Tomas Targownik, கட்டுப்பாட்டை இழந்து Mercedes காரில் மோதியதில் இவ்விபத்து சம்பவித்திருந்தது.
விபத்தை ஏற்படுத்திய Tomas Targownik, ஐஸ் எனப்படும் போதைப் பொருளை உட்கொண்டிருந்ததாகவும், தனது காரை மணிக்கு 200 கிலோ மீட்டர் வேகத்தில் ஓட்டிச் சென்றிருந்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில் தனக்கு பிணை வழங்க வேண்டுமென்று Tomas Targownik விடுத்த வேண்டுகோளை ஏற்ற நீதிபதி, இவரது உடல்நலம் மற்றும் கடந்தகால நடவடிக்கைகளின் அடிப்படையில், சில தினங்களுக்கு முதல் நிபந்தனைகளுடன் பிணையில் விடுதலை செய்து உத்தரவிட்டார்.
எனினும் தனது விருப்பத்திற்கு மாறாகவே Tomas Targownik-க்கு பிணை வழங்கியதாகத் தெரிவித்துள்ள நீதிபதி, குற்றம் சாட்டப்பட்ட ஒருவரை பிணையில் விடுவிப்பது குறித்த சட்டம் விக்டோரியா மாநிலத்தில் இன்னமும் மாற்றியமைக்கப்படாமை குறித்து விசனம் வெளியிட்டுள்ளார்.
கடந்த ஆண்டு Bourke Street Mall-இல் பாதசாரிகள் மீது காரால் மோதி நடத்தப்பட்ட தாக்குதலைத் தொடர்ந்து, குற்றம்சாட்டப்பட்ட வாகன ஓட்டுநர்களை பிணையில் விடுவிப்பது குறித்த சட்டத்தை மாற்றியமைக்கவுள்ளதாக விக்டோரியா அரசு தீர்மானம் நிறைவேற்றியபோதிலும், இச்சட்டம் இன்னமும் அமுலுக்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
