இலங்கையில், சிங்கள பௌத்தர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் இடையே முறுகல் நிலை சில வருடங்களாகவே இருந்துவருகிறது. இஸ்லாமியர்கள் மதமாற்றம் செய்கிறார்கள் என்றும், புத்த வரலாற்று இடங்களைச் சிதைக்கிறார்கள் என்றும் சிங்கள பௌத்தர்கள் குற்றம்சாட்டிவருகின்றனர். இலங்கையில், ரோஹிங்யா அகதிகளுக்கு அடைக்கலம் தருவதற்குப் பௌத்தர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவது மட்டுமன்றி, போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளார்கள்.
''சிறப்பு அமைச்சரவைக் கூட்டம் இன்று கூடியது. அதில், தீவிரமடைந்துள்ள மத மோதல்கள்குறித்து விரிவாக பேசப்பட்டது. நாட்டின் பிற பகுதிகளுக்கும் மத மோதல்கள் பரவுவதைத் தடுக்கும் வகையில், 10 நாள்கள் அவசர கால சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. ஃபேஸ்புக் போன்ற சமூக ஊடகங்கள் வாயிலாக வதந்தியையும் மோதலையும் பரப்புவோர்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று இலங்கை அரசின் செய்தித்தொடர்பாளர் தயாசிறி ஜெயசேகரா கூறினார்.
இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா வெளியிட்ட அறிக்கையில், ''கடந்த சில தினங்களாக அம்பாறை, கண்டி ஆகிய பிரதேசங்களில் இடம்பெற்ற சம்பவங்கள், உயிர் சேதத்தையும் பொருள் சேதத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. அங்கு உருவாகியுள்ள பதற்றமான சூழ்நிலையால், நாட்டில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படும் சூழல் உருவாகியிருக்கிறது. உயிரையும் உடமைகளையும் இழந்தவர்களுக்கும், அவர்களின் உறவினர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். வன்முறைச் சம்பவங்களை வன்மையாகக் கண்டிக்கிறேன். தற்போது மோதல் ஏற்பட்டுள்ள பிரதேசங்களில், வரும் 24 மணி நேரத்தில் அமைதி உண்டாக்க முழு முயற்சி எடுக்கப்படும் என்று உறுதி அளிக்கிறேன்'' என்றார்.

இதனிடையே ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களை இலங்கையில் தடை செய்யப்பட்டுள்ளதை இலங்கையிலுள்ள எமது செய்தியாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.
