குயின்ஸ்லாந்து மாநிலத்தில் தற்போது 69 இடங்களில் காட்டுத்தீ பற்றியெரிகிறது என்றும் குறைந்தது 17 வீடுகள் தீக்கிரையாகியுள்ளன என்று தீயணைப்புப் படையினர் கூறுகின்றனர்.
Gold Coastஇன் உள் நாட்டுப் பகுதியிலுள்ள Sarabah மற்றும் Binna Burra என்ற இடங்களுக்கு அருகில் இப்பொழுதும் இந்தக் காட்டுத்தீ எரிந்து கொண்டிருக்கிறது.
இந்த இடங்களில் 11 வீடுகள் தீக்கிரையாகியுள்ளன என்று அம் மாநில அவசர சேவைகள் பிரிவினர் கூறுகின்றனர்.

மூன்று வீடுகள் உட்பட மேலும் 7 கட்டுமானங்கள் தென்மேற்கு குயின்ஸ்லாந்து பகுதியில் உள்ள Stanthorpe மற்றும் Applethorpe என்ற இடங்களுக்கு அருகில் எரிந்துள்ளன.
குயின்ஸ்லாந்து மாநிலத்தின் வட பகுதியிலுள்ள Mareeba சமூகம் வெள்ளி காலையிலிருந்து, எப்படிப் பரவும் என்று கூறமுடியாத, ஆபத்தான காட்டுத்தீயின் அபாயத்தின் நடுவில் வாழ்கிறது.
Ipswich மற்றும் Brisbane இடையிலுள்ள Riverview என்ற இடத்தில் வாழும் மக்கள் "அறிவித்தல் வந்தவுடன் இடத்தை விட்டு வெளியேற வேண்டும்" என்று எச்சரிக்கப்பட்டுள்ளார்கள்.
தென்கிழக்கு பகுதி நோக்கி மிக விரைவாக காட்டுத்தீ பரவி வருகிறது. தீயணைப்பு படையினர் அதன் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் தவிக்கிறார்கள்.
Stanthorpe மற்றும் Applethorpe பகுதிகளில் அழிவை ஏற்படுத்திய காட்டுத்தீ இன்னமும் எரிந்து கொண்டிருக்கிறது.

வட பகுதியிலுள்ள Arico Lane மற்றும் Matthews Lane இடையிலான பகுதியிலும், தெற்கில் Plant Lane பகுதியிலும் காட்டுத்தீ இப்பொழுதும் உக்கிரமாக எரிந்து கொண்டிருக்கிறது. அந்தப் பகுதி மக்கள் வீடு திரும்ப முடியாத நிலையில் இருக்கிறார்கள்.
Thulimbah, Cottonvale மற்றும் Dalveen பகுதி மக்கள் வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். New England Highway நெடுஞ்சாலை இப்பொழுது மீண்டும் திறக்கப்பட்டிருந்தாலும், எந்த நேரமும் மூடப்படலாம்.
Sarabah மற்றும் Stanthorpe பகுதிகளில் 17 வீடுகள் தீக்கிரையாக்கி உள்ளன என்று குயின்ஸ்லாந்து Premier Annastacia Palaszczuk அறிவித்தார்.
வெப்பநிலையும் காற்றின் வேகமும் சற்று குறைந்திருந்தாலும், தீயணைப்பு படையினரின் வேலை இலகுவானதாக இல்லை - வீசிக்கொண்டிருக்கும் காற்று காட்டுத் தீயை கொழுந்து விட்டு எரிய செய்து கொண்டிருக்கிறது.
இந்தக் காட்டுத்தீயினால் வீடு இழந்தவர்களுக்கு, ஆதரவு வழங்குவதற்கு குயின்ஸ்லாந்து Premier Annastacia Palaszczuk உறுதியளித்துள்ளார்.
"இந்த காட்டுத்தீயினால் அதிகமாக பாதிக்கப்பட்ட பல குடும்பங்கள், மன உழைச்சலுக்கு உள்ளாகியுள்ளார்கள். இவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்குத் தேவையான உதவிகளை நாம் வழங்குகிறோம். அவர்கள் ஆபத்தில்லாமல் இருக்கிறார்கள் என்று நாங்கள் நம்புகிறோம். எங்கள் சமுதாயத்தில் உள்ளவர்கள், மீண்டும் தமது சொந்த காலிலேயே நிற்பதற்காக எல்லா முயற்சியும் எடுப்பார்கள்."

காட்டுத்தீ பற்றி எரியும் இடங்களுக்கு அருகிலுள்ள நூற்றுக்கணக்கானவர்கள், நேற்றிரவு ஆதரவு மையங்களில் தங்க வைக்கப்பட்டார்கள். அவர்களில் சிலர் வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.
இதுவரை உயிரிழப்பு எதுவும் நிகழவில்லை, ஆனால் 20 வயதான ஒரு தீயணைப்பு படை வீரர், Clagiraba என்ற இடத்தில் தீயணைப்பு முயற்சியில் ஈடுபட்டுள்ள வேளை மயங்கி விழுந்தார். அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும் நான்கு பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளார்கள் என்று அதிகாரிகள் சொல்கிறார்கள், ஆனால் எங்கிருந்து என்பது தெரியாது.
பாதிக்கப்பட்ட இடங்களில் வாழ்பவர்கள் சமூக வலைதளங்களில் தங்கள் வீடுகள் பற்றி எரிவதைப் பகிர்ந்துள்ளார்கள். வானமே இரத்தக்களரி போல் காணப்படுகிறது என்று அவர்கள் விவரித்துள்ளார்கள்.
என்ன நடக்கிறது என்பதை விவரிக்க, வார்த்தைகள் வராமல் தடுமாறினார் Stanthorpe என்ற இடத்தில் வாழும் Samantha Wantling.
"ஒரு அணுக்குண்டு வெடித்துள்ளது போல் உணர்கிறேன்" என்று ABC ஊடகத்திடம் அவர் கூறினார்.
Canungra பகுதியில் தீயணைப்பு முயற்சியில் ஈடுபட்டிருக்கும் தீயணைப்பு படை வீரர்கள் மிகவும் களைப்படைந்துள்ளார்கள் என்று Rural Fire Service பேச்சாளர் Kaye Healin கூறினார். காட்டுத்தீ எரிந்து கொண்டிருக்கின்ற இடங்களில் மணிக்கு 50 கிலோ மீட்டர் வேகத்திற்கும் அதிகமாக காற்று வீசும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.
"அவர்களும் இந்த சமூகத்தை சார்ந்தவர்கள் தான். இந்த வீடுகள் எரிவதைப் பார்த்து, எரியும் வீடுகளுக்குத் தம்மால் ஒன்றும் செய்ய முடியவில்லை என்று மனமுடைந்துள்ளார்கள்."
NSW மாநிலத்தில், தீயணைப்பு படையில் தன்னார்வத் தொண்டு செய்யும் ஒருவரின் தீயணைப்பு வண்டி எரிந்ததனால், பயங்கர தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
At 1700hrs today, there are 62 bush and grass fires burning across NSW with 24 uncontained, predominantly in the north of the state. Two fires remain at Emergency Warning & a further five are at Watch and Act due to windy conditions. #NSWRFS #nswfires pic.twitter.com/vPgidvZ8xY— NSW RFS (@NSWRFS) September 7, 2019
Tenterfield என்ற இடத்தில் Mount Mackenzie Road பகுதியில் 3 ஆயிரத்து 500 ஹெக்டேர் நிலப்பரப்பில் எரிந்த தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயற்சித்த இவரது கைகள், கால்கள், முதுகு மற்றும் முகம் எரிந்த நிலையில் இவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தீயணைப்பு முயற்சிகள் எவ்வளவு பயங்கரமானவை என்பதை, இவருக்கு ஏற்பட்ட விபத்து காட்டுகிறது என்று NSW Rural Fire Service வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்று சொல்கிறது.
உள்ளூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற இவர், Brisbane நகர மருத்துவ மனைக்கு மாற்றப்பட்டுள்ளார். ஆபத்தான ஆனால் தேறி வரும் நிலையில் அவர் இப்பொழுது உள்ளார்.
இவருடன் கடமையாற்றிய இன்னொரு தீயணைப்பு படை வீரர் காயம் அடையாவிட்டாலும், அவர்களது தீயணைப்பு வண்டி முற்றாக எரிந்து விட்டது.
நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தின் Drake மற்றும் Bees Nest பகுதிகளிலும் காட்டுத்தீ அபாயம் உள்ளது என்று அங்குள்ள மக்கள் எச்சரிக்கப்பட்டுள்ளார்கள். Tenterfield, Cobargo மற்றும் Legume பகுதி மக்கள் அவதானத்துடன் இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த வருடம், வழமைக்கு முன்னதாகவே காட்டுத் தீ விபத்துகள் ஏற்பட்டமை, தீயணைப்பு வீரர்களுக்கும் அங்கு வாழும் மக்களுக்கும் மிகப்பெரும் ஆபத்தைக் கொண்டு வந்துள்ளன என்று NSW Rural Fire Service கூறுகிறது
காட்டுத்தீ குறித்த செய்திகளை உடனுக்குடன் அறிய Queensland Fire and Emergency Services மற்றும் New South Wales Rural Fire Service என்ற இணைய தளங்களைப் பாருங்கள்.
