குயின்ஸ்லாந்து மாநிலத்தின் பிலோயெலா என்ற இடத்திலுள்ள பூங்கா ஒன்றில், கையால் எழுதப்பட்ட பதாகைகள், மெழுகுவர்த்திகள் ஆகியவற்றுடன் 50 பேர் ஒரு மாலைப் பொழுதில் கூடி இருந்தார்கள். "அவர்களை வீட்டுக்கு அழைத்து வாருங்கள்", "அவர்கள் இங்கேயே தங்கலாம்" என்ற வாசகங்கள் அந்த பதாகைகளில் எழுதப்பட்டிருந்தன.
சோகமாக நின்றிருந்த அவர்கள் முகத்தில், தம் கோரிக்கை மீது திடமான நம்பிக்கை தென்பட்டது.
அதற்கு ஒரு வாரத்திற்கு முன் - 2018 ஆம் ஆண்டு, மார்ச் 5 ஆம் நாள், அதிகாலை நேரம், நான்கு பேர் கொண்ட ப்ரியா - நடேஸ் குடும்பத்தை அவர்கள் வீட்டிலிருந்து மெல்பேர்ண் நகரிலுள்ள குடிவரவு தடுப்பு முகாமுக்குக் காவல்துறை எடுத்துச் சென்றது. அவர்கள் இலங்கைக்கு நாடுகடத்தப்படப் போகிறார்கள் என்ற செய்தி, அந்த நகரின் 5728 குடி மக்களுக்கும் உடனடியாகப் பரவியது. அவர்களும் உடனேயே செயலில் இறங்கினார்கள்.
இந்த குடும்பத்திற்காக நடத்தப்பட்ட விழிப்புணர்வு போராட்டத்தில் கலந்துகொண்ட சிலர் தம்முடைய நண்பர்களை இழந்து விட்டது குறித்து கவலை வெளியிட்டார்கள். "அவர்கள் வாழ்ந்த வீடு அமைந்திருந்த சாலை, காவல்துறையினரால் மூடப்பட்டுள்ளது" என்று சிலர் தகவல் வெளியிட்டார்கள்.

அவர்களில் ஒருவர், உள்ளூர் சமூக சேவையாளரும் பிரியா - நடேஸ் குடும்பத்தின் நெருங்கிய நண்பருமான Angela Fredericks. பிரியா - நடேஸ் தம்பதியையும், ஆஸ்திரேலியாவில் பிறந்த அவர்களது இரண்டு குழந்தைகளையும் பிலோயெலா நகருக்குத் திரும்பக் கொண்டுவர வேண்டும் என்ற போராட்டத்தின் சின்னமாக மாறி இருக்கிறார் Angela Fredericks.
நாடளாவிய போராட்டமாக தனது கோரிக்கை மாறும் என்று Angela Fredericks அப்போது நினைத்திருக்கவில்லை detention centre on Christmas Island - a remote Australian territory off Indonesia.

“பெரும்பாலான கிராமங்களைப் போல, நாங்கள் ஒருவரை அரவணைத்து செல்லும் ஒரு சமூகம். கடினமாக உழைப்பவர்கள் இங்கு வந்தால் நாங்கள் அதைப் பாராட்டுகிறோம்,” என்று SBS செய்திப் பிரிவினரிடம் Angela கூறினார்.
“முதல் நாள் நடந்த விழிப்புணர்வு கூட்டத்திற்கு பெருந்திரளான மக்கள் வந்திருந்தது என்னை வியப்புக்கு உள்ளாக்கியது என்றாலும் அது இயற்கை தான். நாம் ஒருவரை ஒருவர் மதித்து வாழும் சமூகம்”

இலங்கையில் தமது உயிருக்கு ஆபத்து என்று காரணம் காட்டி, புகலிடம் கோரி ஆஸ்திரேலிய வந்திருந்த ப்ரியா - நடேஸ் தம்பதியினர், நான்கு வருடங்களுக்கு முன் பிலோயெலா என்ற இடத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்கள்.
இருவரும் தனித்தனியாக படகு மூலம் ஆஸ்திரேலியா வந்திருந்தார்கள். இருவருக்குமே புகலிடம் கோருவதற்குத் தனித்தனியான காரணங்கள் இருந்தன. ப்ரியாவின் முன்னாள் கணவர், அவரது கண் முன்னாலேயே எரிக்கப்பட்டிருந்தார். விடுதலைப்புலிகளுடன் தொடர்புடையதாக கூறி நடேஸ் புகலிடம் கோரியிருந்தார்.
பிலோயெலா எல்லா என்ற இடத்தில் குடியமர்ந்த நடேஸ், அங்கிருக்கின்ற இறைச்சியைத் தயார் படுத்தும் ஆலையில் வேலை செய்ய ஆரம்பித்தார். இந்த தம்பதியினருக்கு இரண்டு பெண் குழந்தைகள் பிறந்தார்கள். கோபிகாவிற்குத் தற்போது நான்கு வயது, தருணிகாவிற்கு இரண்டு வயது.

"இவர்களுக்குப் பாதுகாப்பு வீசா வழங்குவதற்கான எந்த காரணமும் இல்லை" என்று உள்துறை அமைச்சு தொடர்ச்சியாகச் சொல்லி வருகிறது. இருந்தாலும், தமக்கு இந்த குடும்பத்தின் சேவை அவசியமானது என்று பிலோயெலா சமூகம் வாதிடுகிறது.
தனது சலுகையைப் பயன்படுத்தி, இவர்களை இங்கு வாழ விடுமாறு விடுக்கப்பட்ட கோரிக்கைகளை உள்துறை அமைச்சர் மந்திரி பீட்டர் டட்டன் நிராகரித்துள்ளார். தாம் இந்த நாட்டில் வாழ்வதற்கு, தங்கள் குழந்தைகளைப் பணயம் வைக்கிறார்கள் இந்தத் தம்பதியினர் என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
"இந்தக் குடும்பம், பல நீதிமன்ற விசாரணைகளை எதிர் கொண்டுள்ளது. ஒவ்வொரு விசாரணையிலும் அவர்கள் அகதிகள் அல்ல என்று கண்டறியப்பட்டுள்ளது,” என்று கடந்த ஆண்டு SBS செய்திப் பிரிவினரிடம் அமைச்சர் Peter Dutton கூறினார்.
அமைச்சரும் மறுத்து விட்டதால், இவர்களுடைய முதல் வழக்கில் சேர்த்துக் கொள்ளப்படாத இரண்டு வயதான தருணிக்காவிற்குப் பாதுகாப்பு வீசா விண்ணப்பிக்க உரிமை உள்ளதா என்று இந்தக் குடும்பம் வழக்குத் தொடர்ந்துள்ளது. அதன் தீர்ப்பை நீதிமன்றம் இன்று கையளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த வழக்கு விசாரணை கடந்த வெள்ளிக்கிழமை ஆரம்பமாகியது. ஆனால், கடைசி நேரத்தில் உள்துறை அமைச்சு புதிய தரவுகளை சமர்ப்பித்ததால், விசாரணையை இன்று மீண்டும் எடுத்துக் கொள்வதாக நீதிபதி அறிவித்திருந்தார்.
குடும்பத்திற்கு ஆதரவாகத் தீர்ப்பு வழங்கப்பட்டால், அவர்கள் நாட்டில் நிரந்தரமாகத் தங்க அனுமதிக்கப்படுவார்கள் என்று அர்த்தமில்லை. அந்த முடிவு மீண்டும் உள்துறையின் கைகளிலேயே விடப்படும்.
சட்ட நடவடிக்கைகள் நடந்து கொண்டிருக்கும் வேளையில், இந்தக் குடும்பம் கிறிஸ்துமஸ் தீவில் ஐந்து மாதங்களுக்கும் மேலாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள். அவர்கள் அனைவரும் ஒரே ஒரு படுக்கையைப் பகிர்ந்து கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறார்கள்.
அந்தத் தீவில் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டிருப்பது தவிர, சமீபத்தில் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிப்பதாக சந்தேகிக்கப்படுபவர்களையும் தனிமைப்படுத்தப்படுத்த இந்தத் தீவே பயன்படுத்தப்பட்டது. இவர்களை இந்தத் தீவில் தங்க வைக்க ஏற்கனவே 27 மில்லியனுக்கும் அதிகமாக செலவாகியுள்ளது என்று தெரியவருகிறது.
‘நாங்கள் ஏதாவது செய்ய வேண்டும் என்று நாங்கள் உணர்ந்தோம்’
இந்தக் குடும்பத்தை மீண்டும் அவர்கள் வாழ்ந்த பிரதேசத்தில் அரசு வாழ விட வேண்டும் என்ற கோரிக்கை மனுவில் 270,000 பேர் கையொப்பமிட்டுள்ளார்கள். அதில் எதிர்க்கட்சித் தலைவர் Anthony Albanese மற்றும் முன்னாள் துணைப் பிரதமரும் Nationals கட்சியின் முன்னாள் தலைவருமான Barnaby Joyce மற்றும் சர்ச்சைக்குரிய வானொலி பிரமுகர் Alan Jones ஆகியோரும் அடங்குவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அரசியலில் முந்தைய அனுபவம் எதுவும் இல்லாத Angela Fredericksற்கு, இந்தக் குடும்பத்திற்கு ஆதரவு வழங்க தாம் ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் பிறந்தது. இந்தக் குடும்பம் காவலில் வைக்கப்பட்ட பின்னர், சக குடியிருப்பாளரும் சமூக சேவையாளருமான Bronwyn Dendle தானும் அதே சிந்தனை கொண்டுள்ளதாக, Angelaவிடம் கூறினார்.

“நாங்கள் மிகவும் நியாயமானவர்கள். இதனை நடக்க விடக்கூடாது” என்று முடிவெடுத்த Angela, “நாங்கள் மற்றவர்களுடன் பேச ஆரம்பித்தோம்” என்றார்.
என்ன நடந்தது என்பதை விவரித்து முகநூலில் நண்பர்களுக்கு செய்திகள் அனுப்ப ஆரம்பித்த இவர்கள், ஒரு முகநூல் குழுவையே ஆரம்பித்தார்கள். இணைய வழியாகவே ஒரு மனுவை தயாரித்து மக்களிடம் கையெழுத்து வாங்கலாம் என்று அவர்களது நண்பர் ஒருவர் பரிந்துரைத்தார்.
"நான் உண்மையில் அதை கூகிள் செய்து பார்த்தேன் ... பின்னர் நாங்கள் உட்கார்ந்து இவர்கள் கதையை ஒன்றாக இணைத்து, சனிக்கிழமை காலை ஆரம்பித்தோம்... திங்களன்று பல ஊடகங்கள் எங்களைத் தொடர்பு கொள்ள ஆரம்பித்தன”என்று அவர் கூறினார்.
அதே வார இறுதியில், குயின்ஸ்லாந்து மாநில சுகாதார மாநாடு பிலோயெலாவில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட அரசியல்வாதிகள் மற்றும் ஒரு ABC பத்திரிகையாளரிடம் தமது கோரிக்கையைப் பரப்புவதற்கான வாய்ப்பை நன்றாகப் பயன்படுத்திக் கொண்டார்கள் இவர்கள்.

“நான் விதியை நம்புபவள். இதைச் செய்ய சரியான வாரத்தில் நாம் ஆரம்பித்தோம் என்று நான் உணர்கிறேன்,” என்று அவர் கூறினார். “நாங்கள் என்ன செய்ய முடியும் என்பது எங்களுக்குத் தெரிந்திருக்கவில்லை, ஆனால் நாங்கள் ஏதாவது செய்ய வேண்டும் என்பது மட்டும் எங்களுக்குத் தெரியும்.”
அந்த முதல் வார இறுதியில் இருந்து, Home to Bilo பிரச்சாரகர்கள் நாடு முழுவதும் போராட்ட அணிவகுப்புகளை ஏற்பாடு செய்துள்ளனர், வழக்குகளுக்குத் தேவையான கட்டணங்களைச் செலுத்த பல்லாயிரக்கணக்கான டொலர்களைத் திரட்டியுள்ளார்கள், 190,000 பேர் கையெழுத்திட்ட ஒரு மனுவை குடிவரவு அமைச்சர் David Coleman இடம் வழங்கியுள்ளார்கள், மேலும் தொடர்ச்சியாக ஊடகங்களுக்கு செய்திகள் வழங்கியும் தொலைக்காட்சியில் தோன்றியும் உள்ளார்கள்.
இதற்கிடையில், குடும்பத்தின் நிலைமை குறித்த செய்திகளைத் தொடர்ந்து வழங்கும் ‘Bring Priya, Nades and their Girls Home To Biloela’ முக நூல் பக்கத்தை 12,000க்கும் மேற்பட்டோர் தொடர்ந்து வருகிறார்கள்.
இவையெல்லாம் இருந்தபோதிலும், இந்தக் குடும்பத்தின் எதிர்காலம் முன்னெப்போதையும் விட நிச்சயமற்றதாகவே உள்ளது.




