ஆஸ்திரேலிய குடிவரவு தடுப்புமுகாம்களிலுள்ளவர்கள் மிக அதிகளவு காலம் அங்கு தடுத்துவைக்கப்படுவதால் அவர்கள் மோசமான விளைவுகளை எதிர்கொள்ளும் ஆபத்தில் இருப்பதாக ஆஸ்திரேலிய மனித உரிமை ஆணையகத்தின் புதிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஆஸ்திரேலிய தடுப்பு முகாம்கள் பலவற்றுக்கு நேரில் சென்று ஆராய்ந்ததன் அடிப்படையில் இப்புதிய அறிக்கையை மனித உரிமை ஆணையகம் வெளியிட்டுள்ளது.
இதன்படி குடிவரவு தடுப்புமுகாம்களில் உள்ளவர்கள் அங்கு தடுத்துவைக்கப்படும் கால எல்லை கனடா, பிரித்தானியா போன்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது மிக அதிகம் எனவும், இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதில் அரசு தற்போதுள்ளதைவிட சிறப்பாக இயங்கலாம் எனவும் ஆஸ்திரேலிய மனித உரிமை ஆணையர் Edward Santow தெரிவித்துள்ளார்.
செப்டம்பர் 2020 தரவுகளின்படி ஆஸ்திரேலிய குடிவரவு தடுப்புக்காவலில் ஒருவர் வைக்கப்படும் சராசரி காலம் 581 நாட்கள்-அல்லது 18 மாதங்களுக்கும் மேலாக காணப்படுவதாகவும், இது ஆஸ்திரேலிய குடிவரவு தடுப்புக்காவல் வரலாற்றில் பதிவான மிக அதிகமான சராசரி எனவும் ஆணையகத்தின் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
அதேநேரம் 2019 தரவுகளின்படி, தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்களில் ஐந்தில் ஒருவர் இரண்டு வருடத்திற்கும் அதிகமான காலம் குடிவரவு முகாம்களில் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ள இவ்வறிக்கை, புகலிடக்கோரிக்கையாளர்களைத் தடுத்துவைப்பதற்கென மெல்பேர்ன் மற்றும் பிரிஸ்பேர்னில் ஹோட்டல்களை தடுப்புமுகாம்களாக பயன்படுத்தும் அரசின் செயற்பாட்டை கடுமையாக சாடியுள்ளது.
இந்நிலைமை மாற்றப்பட வேண்டும் என்பது உட்பட சுமார் 44 பரிந்துரைகளை மனித உரிமை ஆணையகம் முன்வைத்துள்ளபோதும் இதில் 26 பரிந்துரைகளை ஆஸ்திரேலிய உள்துறை அமைச்சு நிராகரித்துள்ளது.
மேலும் ஒருவரின் தடுப்புக்கால எல்லை அவரது வழக்கின் தன்மை, நடத்தை மற்றும் நாட்டின் பாதுகாப்பு உட்பட பல அம்சங்களில் தங்கியுள்ளதாக ஆஸ்திரேலிய உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
