இலங்கையில் இடம்பெற்ற ஈஸ்டர் தின தற்கொலைக்குண்டுத்தாக்குதல்களை நடத்தியவர்களுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் மியான்மாரில் வைத்து இலங்கையைச்சேர்ந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த 2018 ஆம் ஆண்டு சுற்றுலாப்பயண விசாவில் மியான்மாருக்குச்சென்று அங்கு தங்கியிருந்த 39 வயதுடைய குறிப்பிட்ட நபர், நேற்றையதினம் தனது விசாவை புதுப்பிப்பதற்காக மியான்மார் குடிவரவுத்திணைக்களத்துக்கு வந்தபோது கைது செய்யப்பட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக இலங்கை அரசு கேட்டுக்கொண்டதற்கிணங்க மியான்மாரிலுள்ள ஹோட்டல்கள் மற்றும் சுற்றுலா மையங்களில் குறிப்பிட்ட நபர் தங்கியிருக்கிறாரா என்று மியான்மார் பொலீஸார் தேடியபோதும் அவர்களால் குறிப்பிட்ட நபரை கண்டுபிடிக்கமுடியவில்லை என்றும் நேற்றைய தினம் குடிவரவுத்திணைக்களத்துக்கு வந்தபோது பொலீஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டதையடுத்து உடனடியாக அங்கு விரைந்து சென்ற மியான்மார் பொலீஸார் கைது செய்தார்கள் என்றும் குறிப்பிடப்படுகிறது.
குறிப்பிட்ட சந்தேக நபர் தமது நாட்டில் விசா கால எல்லை முடிவடைந்த பின்னரும் பதினான்கு மாதங்கள் சட்ட விரோதமாக தங்கியிருந்திருக்கிறார் என்றும் மியான்மார் பொலீஸார் தெரிவித்துள்ளனர்.
ஈஸ்டர் குண்டுவெடிப்பு சம்பவம் முடிவடைந்து அடுத்தடுத்த வாரங்களில் அந்த சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் அனைவரும் இறந்துவிட்டார்கள் அல்லது கைது செய்யப்பட்டுவிட்டார்கள் என்று இலங்கை பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
