இலங்கையில் இடம்பெற்ற தற்கொலைக்குண்டு தாக்குதல்களுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள இளைஞர் ஒருவர் லண்டனிலுள்ள சில பல்கலைக்கழகங்களில் கல்வி கற்றவர் என்றும், இவருக்கும் இந்தியாவில் தாக்குதல் நடத்துவதற்கு திட்டமிட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டவர்களுக்கும் தொடர்பிருந்துள்ளது என்றும் இலங்கை - இந்தியா பாதுகாப்பு வட்டாரங்களை மேற்கோள்காட்டி Reuters செய்தி வெளியிட்டுள்ளது.
லண்டனில் கல்வி கற்றதாக கூறப்படும் அமீஸ் என்ற 26 வயது இளைஞன் தொழில்நுட்ப துறையில் தேர்ச்சி பெற்றவர் என்றும் செயலிகள் உருவாக்கம் மற்றும் இணைய வடிவமைப்பு பொறிமுறையில் மேற்படிப்பை பூர்த்தி செய்தவர் என்றும் அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது-
தற்கொலைக்குண்டு தாக்குதல்களை அடுத்து கடந்த ஏப்ரல் 25 ஆம் திகதி அமீஸ் கைது செய்யப்பட்டு தற்போது விசாரிக்கப்பட்டுவருவதாக கூறியுள்ள இலங்கை பாதுகாப்புத்துறை வட்டாரங்கள் - இவருக்கும் குண்டுதாரிகளுக்கும் தற்செயலான தொடர்புகள் இருந்திருக்கின்றனவா அல்லது குண்டுத்தாக்குதல்களை மேற்கொண்ட குழுவில் அமீஸ் முக்கிய உறுப்பினரா என்பது குறித்த விசாரணைகளை தற்போது மேற்கொண்டுவருவதாக கூறியுள்ளன.
ஆனால், இந்த இளைஞருக்கும் இந்தியாவில் அகமதாபாத்தில் தாக்குதல் நடத்துவதற்கு திட்டமிட்டார்கள் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட தீவிரவாதிகளுக்கும் இடையில் தொடர்பிருந்ததை கண்காணித்து கண்டுபிடித்த இந்திய புலனாய்வுத்துறையினர் கடந்த மூன்று வருடங்களாக இவரை கண்காணித்துவருவதாக தெரிவித்துள்ளனர். இவருக்கு எதிரான குற்றப்பத்திரங்களை இந்தியப்பாதுகாப்பு தரப்பினர் ஏற்கனவே தயாரித்துமுள்ளனர்.
தற்போது காலவரையற்ற தடுப்புக்காவலில் வைத்து விசாரிக்கப்பட்டுவரும் அமீஸ் தொடர்பான எந்த தகவலும் அவரது குடும்பத்தினருக்கும் தெரியாது.
அளுத்கமவில் உள்ள அவரது தந்தையாரிடம் அவரது மகனது கைது குறித்து கேட்டபோது - தனது மகன் நிரபராதி என்று அவர் கூறியுள்ளார்.
அமீஸ் சார்பில் இப்போதைக்கு சட்டத்தரணிகள் யாரும் முன்னிலையாகவில்லை. பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் சட்ட உதவிகள் இல்லாத விசாரணைகளினை மேற்கொள்ளமுடியும் என்ற பாதுகாப்பு அதிகாரத்தின் அடிப்படையில் அவர் இப்போது விசாரிக்கப்பட்டுவருகிறார்.
