ஆஸ்திரேலியாவில் பயங்கரவாதத்தாக்குதல்களை மேற்கொள்வதற்கு திட்டமிட்டார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட இலங்கை மாணவர் நிஸாம்தீனுக்கு எதிரான அனைத்து குற்றச்சாட்டுக்களையும் ஆஸ்திரேலிய பொலீஸார் வாபஸ் பெறுவதாக தெரிவிக்கப்படுகிறது
ஆஸ்திரேலியாவின் முக்கிய இடங்களில் பயங்கரவாத தாக்குதல்களை மேற்கொள்வதற்கு திட்டமிட்டார் என்றும் முன்னாள் பிரதமர் Malcolm Turnbull உட்பட முக்கிய அரசியல் தலைவர்களை படுகொலை செய்வதற்கும் திட்டமிட்டிருந்தார் என்றும் குற்றச்சாட்டப்பட்டு கடந்த ஓக்ஸ்ட் மாதம் சிட்னியில் வைத்து கைது செய்யப்பட்ட இலங்கை மாணவர் நிஸாம்தீன் உயர்பாதுகாப்பு சிறையில் தடுத்துவைக்கப்பட்டு ஆஸ்திரேலியாவின் பல்வேறு பாதுகாப்பு ஏஜென்ஸிகளினாலும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுவந்தார்.
அவரிடமிருந்து கைப்பற்றப்பட்டதாக கூறப்பட்ட நோட்புத்தகத்திலுள்ள விவரங்கள் எதுவும் அவரது கையெழுத்தில் இல்லை என்றும் ஆதாரமில்லாமல் அவர் கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டிருக்கிறார் என்றும் நிஸாம்தீன் தரப்பில் நீதிமன்றில் முன்னிலையான சட்டத்தரணி எடுத்துக்கூறியதையடுத்து கடந்த மாதம் நிஸாம்தீனுக்கு பிணை வழங்கப்பட்டது.
இந்நிலையில், இன்று வெள்ளிக்கிழமை சிட்னி நீதிமன்றத்துக்கு வெளியே நிஸாம்தீனின் சட்டத்தரணி Moustafa Kheir கூறும்போது - நிஸாம்தீனுக்கு எதிரான பயங்கரவாத குற்றச்சாட்டினை NSW பொலீஸார் வாபஸ்பெறுகிறார்கள் என்றும் தவறான குற்றச்சாட்டுக்கு உள்ளாக்கப்பட்ட நிஸாம்தீன் தனக்கு ஏற்பட்ட அநீதிக்கு எதிராக பொலீஸார் மீது நட்ட ஈடுகோரி வழக்கு தொடுக்கவுள்ளார் என்றும் கூறினார்.
