இஸ்லாமிய தனிநாட்டுக்காக போராடும் அமைப்பின் தலைவர் என்று கருதப்படும் Abu Bakr al-Baghdadi பல வருடங்களுக்கு பின்னர் காணொளி மூலம் தோன்றி இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களுக்கு உரிமை கோரியுள்ளார். தங்களது அமைப்புத்தான் இலங்கையில் தற்கொலைக்குண்டு தாக்குதல்களை மேற்கொண்டதாகவும் தமது இலட்சியத்துக்கான போராட்டம் தொடரும் என்றும் அவர் சூளுரைத்திருக்கிறார்.
சுமார் ஐந்து வருடங்களுக்கு பின்னர் முதல்முறையாக 18 நிமிட காணொளியில் பேசிய Abu Bakr al-Baghdadi தங்களது போராளிகளின் உடலில் இரத்தம் ஓடிக்கொண்டிருக்கும் வரையில் போர் தொடரும் என்று கூறியிருக்கிறார்.
சிரியாவில் தாங்கள் கடைசியாக கட்டுப்பாட்டில் வைத்திருந்த பலம்வாய்ந்த பிரதேசமான Baghouz மீது அமெரிக்காவும் நேச நாட்டு படைகளும் மேற்கொண்ட தாக்குதல்களை மிலேச்சத்தனமும் கொடூரமும் நிறைந்தவை என்று கூறிய Abu Bakr al-Baghdadi தமது படைகள் தொடர்ந்தும் உறுதியோடு போராடுவது மேற்கின் இதயங்களை அதிரச்செய்திருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார்.
தீவிரவாத அமைப்பின் மிக முக்கிய தலைவர்களில் ஒருவரான Abu Bakr al-Baghdadi அமெரிக்கா மற்றும் நேச நாட்டுப்படைகளினால் தேடப்பட்டுவரும் மிக முக்கியமான நபராவார். இவரது தலைக்கு அமெரிக்கா 25 மில்லியன் டொலர்கள் சன்மானம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
