இலங்கையில் இன்று திங்கட்கிழமை முதல் Burqa-புர்கா அணிவதற்கான தடை அமுலுக்குவருகிறது. தொடர்குண்டுவெடிப்புக்களை தொடர்ந்து இந்த சட்டத்தைக்கொண்டுவரவேண்டும் வேண்டும் என்று பல்வேறு தரப்புக்களிலும் கொடுக்கப்பட்டுவந்த அழுத்தத்தையடுத்து இந்த அறிவிப்பு நேற்றிரவு வெளியானது.
இது தொடர்பான அறிவிப்பை விடுத்த ஜனாதிபதி செயலகத்தின் செய்திக்குறிப்பில் - தங்கள் அடையாளத்தை மறைக்கும் வகையில் முகத்தை மூடுகின்ற நடைமுறைக்கு தடை விதிப்பதற்கான சட்டத்தை அமுலுக்கு கொண்டுவருவதற்கு ஜனாதிபதி முடிவெடுத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தடை அறிவிப்பு பல்வேறு தரப்பிலும் பல விமர்சனங்களை எழுப்பியிருக்கிறது. இலங்கையின் தொடர்குண்டுவெடிப்புக்களில் ஈடுபட்ட தற்கொலைக்குண்டுதாரிகள் எவரும் தங்கள் அடையாளத்தை மறைத்திருக்கவில்லை. அவ்வாறிருக்கும்போது, சம்பந்தமே இல்லாமல் இந்த தடையைக்கொண்டுவந்திருப்பதற்கு என்ன காரணம் என்று சமூக வலைத்தளங்களில் கேள்வி எழுந்துள்ளது.
பாதுகாப்பு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துக்களின் பிரகாரம் - நாட்டில் மிகப்பெரியதொரு பதற்றம் நிலவும் இக்காலப்பகுதியில் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன என்றும் படையினரின் தேடுதல் நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ள நிலையில், நாட்டு குடிமக்கள் எவராக இருப்பினும் அவர்கள் தங்கள் அடையாளத்தை மறைக்கும் வகையிலிருப்பது பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு இடைஞ்சலானது என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
உலகெங்கிலும் சுமார் 14 நாடுகள் தற்போது புர்காவுக்கு தடை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
