இந்தியா கேரளாவைச் சேர்ந்த அனீஷ் கொல்லிக்கரா மற்றும் கிருஷ்ணா அனீஷ் தம்பதியர் தமது இரு குழந்தைகளுடன் கடந்த 7 ஆண்டுகளாக ஆஸ்திரேலியாவில் வாழ்கின்றனர். 10 வயது மகன் ஆர்யனுக்கு Down syndrome எனும் நோய்நிலைமை உள்ளது. மகள் ஆர்யஸ்ரீக்கு 8 வயது.
ஆர்யனின் நோய்நிலைமையுடன் தொடர்புடைய மருத்துவ செலவுகள் அதிகம் என்பதாலும், இத்தகைய நோய்நிலைமையுள்ள குழந்தை வரி செலுத்துவோருக்கு சுமையாக கருதப்படுவதாலும் அனீஷ் கொல்லிக்கரா மற்றும் கிருஷ்ணா அனீஷ் தம்பதியரின் நிரந்தர வதிவிடத்திற்கான விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதையடுத்து இக்குடும்பம் இரண்டு வாரங்களுக்குள் நாடு கடத்தப்படும் நிலையை எதிர்கொண்டுள்ளது.
ஆர்யன் மற்றும் ஆர்யஸ்ரீ இருவரும் தங்கள் வாழ்நாளின் பெரும்பகுதியை ஆஸ்திரேலியாவில்தான் கழித்துள்ளனர்.
இந்நிலையில் குடிவரவு அமைச்சின் இச்செயல் மனிதாபிமானமற்றது என பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனம் வெளியிடப்பட்டுள்ள அதேநேரம், குடிவரவு அமைச்சர் Andrew Giles இவ்விடயத்தில் தலையிட்டு குறித்த குடும்பம் நாடு கடத்தப்படுவதிலிருந்து பாதுகாக்க வேண்டுமென்ற குரல்கள் வலுத்துவருகின்றன.

ஆர்யனின் பெற்றோர் இருவரும் மேற்கு ஆஸ்திரேலியாவில் முக்கியமான தொழில்களில் பணிபுரிகின்றனர் - தாயார் கிருஷ்ணா ஒரு இணைய பாதுகாப்பு நிபுணர் மற்றும் தந்தை அனீஷ் தொலைத்தொடர்பு துறையில் முக்கிய பணியில் உள்ளார்.
இந்தப்பின்னணியில ஆர்யனின் குடும் பம் ஆஸ்திரேலியாவில் இருப்பதை உறுதி செய்யுமாறு வலியுறுத்தி, People With Disability Australia பொருளாளர் சுரேஷ் ராஜன் திங்களன்று அமைச்சர் Andrew Gilesக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
"இந்தக் குழந்தை வரி செலுத்துவோருக்குச் சுமை என்று கூறுபவர்களின் மனிதநேயம் எங்கே?" என்று அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in
பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில்
செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
