சமூக வலைத்தளத்தின் ஊடாக அறிமுகமான பெண் நண்பியை நேரில் சந்திக்க சென்ற இந்திய இளைஞர் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் மெல்பேர்னில் இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவத்தில் இந்தியாவிலிருந்து மெல்பேர்னுக்கு கல்வி கற்பதற்காக வந்திருந்த Maulin Rathod (வயது 25) என்பவரே கொலைசெய்யப்பட்டுள்ளார்.
மெல்பேர்ன் பல்கலைக்கழகம் ஒன்றில் கணக்கியல்துறையில் பட்டப்படிப்பை மேற்கொள்வதற்காக நான்கு வருட விசாவில் இந்தியாவிலிருந்து வந்திருந்த Maulin Rathod, மெல்பேர்ன் Elsternwick பகுதியில் வசித்து வந்தார்.
சமூக வலைத்தளம் ஊடாக அறிமுகமான 19 வயதான பெண் நண்பியை சந்திப்பதற்காக Sunbury - Ross Court பகுதியில் அமைந்துள்ள அவரது வீட்டுக்கு கடந்த திங்கட்கிழமை இரவு 9 மணியளவில் சென்றிருக்கிறார். அங்கு இடம்பெற்ற சம்பவத்தில் படுகாயமடைந்த Maulin Rathod ஆஸ்பத்திரிக்கு கொண்டுசெல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பயனளிக்காத நிலையில் உயிரிழந்துள்ளார்.
Maulin Rathod அவரது பெற்றோருக்கு ஒரே ஒரு பிள்ளை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கொலைக்கு காரணமானவர் என்று சந்தேகிக்கப்படும் 19 வயது யுவதியை பொலீஸார் கைது செய்துள்ளார்கள். அவருக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட குற்றச்சாட்டுக்களின் பிரகாரம் அவர் மெல்பேர்ன் மாஜிஸ்ரேட் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு ஜுலை 30 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
