மக்களவை தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் போட்டியிட்ட விடுதலை சிறுத்தைகளின் தலைவர் தொல் திருமாவளவன் மிகுந்த போராட்டத்துக்கு பின்னர் நேற்று பின்னிரவு வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டார்.
அவருக்கும் அவரை எதிர்த்துப்போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளருக்கும் இடையில் பலத்த போட்டி நிலவியது. நேற்றிரவு முழுவதும் மாறி மாறி இருவரும் முன்னுக்கும் பின்னுக்குமாக வாக்குகளில் மோதிக்கொண்டிருந்தாக தெரிவிக்கப்பட்டது.
இறுதியாக, திருமாவளவன் 3219 வாக்குகளால் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் விழுப்புரம் வேட்பாளர் டாக்டர் ரவிக்குமார் ஏற்கனவே தி.மு.க. சின்னத்தில் போட்டியிடுவதற்கு வற்புறுத்தப்பட்டிருந்த நிலையில், திருமாவளவனையும் விடுதலை சிறுத்தைகள் சின்னத்தில் கேட்காமல் தி.மு.க. சின்னத்தில் போட்டியிடுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்தது. ஆனால், கட்சி அடையாளத்தையும் தலித் மக்களின் அடையாளத்தையும் இழந்து தனக்கொரு வெற்றி தேவையில்லை எனத் தெரிவித்து விடுதலை சிறுத்தைகள் பெயரிலேயே அவர் போட்டியிட்டு மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் ஐந்து லட்சம் விருப்பு வாக்குகளைப்பெற்று வெற்றிபெற்றார்.
தனது வெற்றி தொடர்பாக அவர் கூறும்போது - இந்த வெற்றி அறத்திற்கு கிடைத்த வெற்றி, மக்களுடைய வெற்றி. ஏற்கனவே நாங்கள் அறிவித்ததை போல சாதிவெறி சக்திகளுக்கு இடமில்லை என்பதை தமிழக மக்கள் உணர்த்தி இருக்கிறார்கள். சனாதன சக்திகள் என்னை தோற்கடிக்க 100 கோடிக்கு மேல் செலவழித்திருக்கிறார்கள். எனக்கெதிரான அவதூறு பிரச்சாரத்தை கடுமையாக மேற்கொண்டார்கள். அவற்றையெல்லாம் தவிடுபொடியாக்கி தலித் அல்லாத சமூகத்தைச் சார்ந்தவர்களும் மிகக்கடுமையாக உழைத்து இந்த வெற்றியை ஈட்டித்தந்திருகிறார்கள் - என்று தெரிவித்துள்ளார்.
