சொந்த ஊருக்கு சென்றபோது கடத்திச்சென்று படுகொலை செய்யப்பட்ட கர்ப்பிணிப்பெண்ணின் கொலையுடன் தொடர்புடையவர் என்று கூறப்படும் பிறிஸ்பனை சேர்ந்த பெண் DNA சோதனைக்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.
அவர் சார்பில் இந்த வழக்கு விடயங்களை கவனித்துவரும் சட்ட நிபுணர்குழு கூறும்போது- DNA சோதனையை பெற்றுக்கொள்வதற்கு பொலீஸார் தகுந்த சட்டப்படிமுறைகளை பின்பற்றவேண்டும். அவை எதுவும் பின்பற்றப்படாமல் கோரிக்கை முன்வைக்கப்பட்டதாலேயே அது நிராகரிக்கப்பட்டது- என்று கூறியுள்ளது.
பிறிஸ்பனை சேர்ந்த Ravneet Kaur கடந்த மார்ச் மாதம் தனது சொந்த இடமான இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்துக்கு விடுமுறைக்கு போயிருந்த சமயம் கடத்திச்செல்லப்பட்டு படுகொலை செய்யப்பட்டிருந்தார். ஒருவாரத்தின் பின்னர் அவரது சடலம் குளமொன்றிலிருந்து மீட்கப்பட்டது.
Ravneet Kaur-இன் கணவருக்கு பிறிஸ்பனில் ஏற்கனவோ வேறொரு பெண்ணுடன் தொடர்பிருந்ததாகவும் அந்தப்பெண்தான் பஞ்சாப்புக்கு சென்று வேறு சிலருடன் சேர்ந்து இந்தக்கொலையை செய்தார் என்றும் பஞ்சாப் மாநில பொலீஸ் வட்டாரங்களை மேற்கோள்காட்டி செய்திகள் வெளிவந்திருந்தன.
இந்நிலையில் குறிப்பிட்ட பெண், கொலை இடம்பெற்ற தினத்துக்கு அடுத்தநாளே ஆஸ்திரேலியாவுக்கு திரும்பிவிட்டார்.
பஞ்சாப் பொலீஸாருடன் இணைந்து ஆஸ்திரேலிய பொலீஸாரும் இந்தக்கொலை தொடர்பான விசாரணகளை மேற்கொண்டுவருகிறார்கள்.
இந்த விசாரணையின் பிரகாரம், கொலையில் தொடர்புடையவர் என்று கருதப்படும் - உயிரிழந்த பெண்ணின் கணவரின் காதலி என்று கூறப்படும் - பெண்ணிடம் DNA சோதனைக்கு ஆஸ்திரேலிய பொலீஸார் கோரிக்கை முன்வைத்தபோதே அதற்கு அவர் மறுப்பு தெரிவித்திருக்கிறார்.
ஆஸ்திரேலியாவில் DNA சோதனை தொடர்பான சட்டங்களின் பிரகாரம் - குற்றமொன்றில் நேரடியாக தொடர்புபட்டிருக்கிறார் என்று பொலீஸார் நீதிமன்றில் நிரூபித்து அதன் பிரகாரம் சோதனைக்கான அனுமதியை நீதிமன்றிடம் பெற்றுக்கொண்டாலேதவிர, யார் மீதும் பலோத்காரமாக பொலீஸார் DNA சோதனையை செய்யமுடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
