உலகில் சில நாடுகளில் தாய்ப்பால் விற்பனை செய்யப்பட்டாலும் ஆஸ்திரேலியாவில் இது வர்த்தகரீதியாக விற்பனை செய்யப்படுவதில்லை.
ஆனால் வெகுவிரைவில் ஆஸ்திரேலியாவிலும் தாய்ப்பால் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
தாய்ப்பாலை ஆஸ்திரேலியாவில் இறக்குமதி செய்வதற்கான அனுமதி இந்திய நிறுவனமான NeoLacta Lifesciences-க்கு கடந்த வருடம் கிடைத்திருந்த நிலையில், இதன் விற்பனை விரைவில் ஆரம்பமாகலாம் என குறிப்பிடப்படுகின்றது.
தற்போது பல பாலூட்டும் தாய்மார், மேலதிகமாக சுரக்கும் பாலை, மேற்கு ஆஸ்திரேலியா, நியூ சவுத் வேல்ஸ், விக்டோரியா மற்றும் குயின்ஸ்லாந்திலுள்ள, தாய்ப்பால் வங்கிகளுக்கு தானமாக வழங்கிவருகின்றனர்.
இது உடல்நலமில்லாமலோ அல்லது குறைப்பிரசவத்திலோ பிறந்த பிள்ளைகளுக்கு உணவூட்டுவதற்கு பயன்படுத்தப்படுகின்றது.
இதுதவிர சில தாய்மார், சமூக வலைத்தளங்களில் விளம்பரப்படுத்தி, தேவையிலுள்ளவர்களுக்கு தாய்ப்பாலை விற்பனை செய்கின்றனர்.
இந்தப்பின்னணியில் NeoLacta நிறுவனம் ஆஸ்திரேலியாவிலுள்ள பல வைத்தியசாலைகளுக்கு தாய்ப்பாலை வழங்குவது பற்றிய பேச்சுக்களில் ஈடுபட்டுள்ளதுடன், பரந்தளவில் இதன் விற்பனைக்கும் தயாராகியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
சில நாடுகளில் பதப்படுத்தப்பட்ட தாய்ப்பால் லீட்டர் ஒன்று 300 டொலர்கள் வரை விற்பனை செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.