Share
இனப்படுகொலையில் ஈடுபட்டவருக்கு 40 வருட சிறைத்தண்டனை
முன்னாள் பொஸ்னிய சேர்பிய தலைவர், ரடவான் கரவிச் (Radovan Karadzic), இனப்படுகொலையில் ஈடுபட்டதாக சர்வதேச நீதிமன்ற விசாரணையில் நிரூபணமாகி 40 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பொஸ்னியா(Bosnia)வில் 1990களில் நடைபெற்ற போரில் பல்லாயிரக்கணக்கானவர்கள் Srebrenica என்ற இடத்தில் கொல்லப்பட்டார்கள். இந்தக் கொடிய செயல் உட்பட, மேலும் பத்து குற்றச்சாட்டுகள் ரடவான் கரவிச் மீது சுமத்தப்பட்டிருந்தன. இரண்டாம் உலகப் போரின் பின்னர் ஐரோப்பாவில் நடந்த மிகப்பெரும் மக்கள் அழிப்பு இது தான் என்று கூறப்படுகிறது. 70 வயதாகும் ரடவான் கரவிச் சரியாவோ (Sarajevo) நகரை முற்றுகையிட்டு அங்கிருக்கும் மக்களைத் தினம் தினம் சுட்டுக் கொன்றார் என்றும் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. 1995ம் ஆண்டே இவர் மீது ஐக்கிய நாடுகள் சபை குற்றம் சுமத்தியிருந்தாலும், 2008ம் ஆண்டு வரை இவர் கைது செய்யப்படவில்லை. மூன்று ஆண்டுகள் நீடித்த பொஸ்னிய மேதலில், எட்டாயிரத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம் ஆண்கள் மற்றும் சிறுவர்கள் இளைஞர்களைக் கொல்வதற்குத் தலைமை தாங்கினார் என்று இவர் மேலுள்ள குற்றம் இவர் இனப்படுகொலைக்கு வித்திட்டார் என்று தீர்ப்பு வழங்கவைத்தது. மொத்தமாக, குறைந்தது ஒரு இலட்சம் பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். கரவிச் ஒரு பொஸ்னிய சேர்பிய அரசியல் தலைவர் மட்டுமல்ல, இராணுவ படைகளின் தளபதியுமாவார். அவர் யுத்தத்தின் போது சேர்பிய இனத்தினரை மட்டுமே பாதுகாத்தார் என்றும் இந்தத் தீர்ப்புக் குறித்து மேல் முறையீடு செய்யப் போவதாக அவருடைய சட்ட ஆலோசகர் கூறினார். ஐக்கிய நாடுகள் ஆதரவுடன், ஹேக் (Hague) நகரில் நடைபெற்ற இந்த விசாரணை மற்றைய மனித உரிமை மீறல் விசாரணைகளுக்கு சர்வதேச சட்டம் எப்படியான தீர்ப்பை வழங்கும் என்ற ஒரு முன்னோடியாகப் பார்க்கப்படுகிறது. "ஒரு ஒருங்கிணைந்த பிரச்சாரத்தில், சர்வதேசங்களும் சேர்ந்து நீதி வழங்குவதில், இது ஒரு முக்கியமான நேரம். அது மட்டுமல்ல, கணவரை இழந்த மனைவிகளும், சகேதரர்களை இழந்த சகோதரிகள் மற்றும் மகன்களை இழந்த தாய்மார்களும் இணைந்து கேட்கும் நீதி விசாரணை" என்று மனித உரிமைக்காகக் குரல் கொடுக்கும் வைத்தியர்களின் அமைப்பான, International policy and partnerships at Physicians for Human Rights அமைப்பின் அதிபர் Susannah Sirkin கூறினார். பொஸ்னிய மனிதப் புதைகுழிகளைக் கண்டுபிடிப்பதில் இந்த அமைப்பு ஈடுபட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Published
By Kulasegaram Sanchayan
Presented by Kulasegaram Sanchayan
Skip to article content
Share this with family and friends