ஆஸ்திரேலியாவுக்கு மீண்டும் வெளிநாட்டு மாணவர்களை அழைப்பதற்குரிய ஏற்பாடுகளை அரசாங்கம் துரிதமாக மேற்கொள்ளாவிடின் வருட இறுதியில் நாட்டின் பொருளாதாரத்தில் எண்ணூறு கோடி டொலர்கள் வருமான இழப்பு ஏற்படும் என்று ஆஸ்திரேலிய வெளிநாட்டு கல்வி அமைப்புக்களின் ஒன்றிய பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் பெப்ரவரி மாதம் ஐந்தாம் திகதி நடைபெறவுள்ள தேசிய அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த விடயம் கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் விக்டோரிய மாநிலம் வெளிநாட்டு மாணவர்களை உள்வாங்குவதற்கான விசேட ஏற்பாடுகளை மேற்கொண்டுவருவதாக தெரிவித்திருக்கிறது. விசேட தனிமைப்படுத்தல் மையங்களைப் பயன்படுத்துவது உள்ளிட்ட ஏற்பாடுகள் குறித்து அமைச்சரவைக்கூட்டத்தில் பேசப்படவுள்ளது.
2019 ஆம் ஆண்டு விக்டோரிய மாநில பொருளாதாரத்துக்கு வெளிநாட்டு மாணவர்களின் வருகையால் 1370 கோடி டொலர் வருமானம் கிடைத்துள்ளது என்றும் 79 ஆயிரம் வேலைவாய்ப்புக்களை உருவாக்கியிருந்தது என்றும் புள்ளிவிவரங்கள் தெரிவித்துள்ளன.
2019 ஆம் ஆண்டு விக்டோரியாவிலிருந்த இரண்டரை லட்சம் வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கை கோவிட் பிரச்சினையால், தற்போது ஒரு லட்சத்து 20 ஆயிரமாக குறைந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது Coronavirus Health Information Hotline-ஐ 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக்கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற்சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.
உங்களுக்கு கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.
ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.
அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.
கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.
