இறந்தவர்களின் உடல்களை உறைநிலையில் பதப்படுத்தி வைப்பதற்கான இடம் ஒன்று ஆஸ்திரேலியாவில் முதன்முதலாக அமைக்கப்படுகின்றது.
விஞ்ஞான வளர்ச்சி அசுரகதியில் சென்றுகொண்டிருக்கும் வேளையில் இறந்தவர்களை உயிர்ப்பிக்கலாம் என்ற நிலை வந்தால், அப்போது தாம் உயிருடன் வர வேண்டும் என விரும்புகிறவர்கள், தமது உடல்களை இவ்வாறு உறைநிலையில் பதப்படுத்தி வைக்கலாம்.
நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தின் Holbrook-இல் அமைக்கப்படும் இந்த இடத்தில், தமது உடல்களை உறைநிலையில் பாதுகாத்துக்கொள்ள விரும்புவோர் விண்ணப்பிக்க முடியும். இதற்கான கட்டணம் 90,000 டொலர்கள் ஆகும்.
சரி இறந்த உடல்களை பதப்படுத்தி உறைநிலையில் பாதுகாக்கும் செயன்முறை எப்படி நடக்கும்?
1. ஒருவர் இறந்ததாக மருத்துவமனை அறிவித்ததுமே உடலைப் பதப்படுத்தும் செயற்பாடு ஆரம்பிக்கும்.
2. உடல் கடும் குளிருக்குள் வைக்கப்படும்.
3. உடலிலிருந்து இரத்தம் முழுவதுமாக வெளியேற்றப்பட்டு குளிர் saline solution செலுத்தப்படும்.
4. உடல் -70 டிகிரி குளிரூட்டப்பட்ட சிறப்பு வாகனத்தில் Holbrook-க்கு கொண்டுவரப்படும்.
5. பின்னர் உடல் குளிர்பெட்டியில் வைக்கப்பட்டு -196 டிகிரியில் பாதுகாக்கப்படும்.
6. இதன்பின்னர் இறந்தவரை மீண்டும் உயிர்ப்பிக்கக்கூடிய வசதி எப்போது வருகிறதோ அப்போது அவரை உயிர்ப்பித்துக்கொள்ளலாம்.
ஆனால் அப்படி ஒரு நாள் வராமலேகூடப் போகலாம் என்பதை தாம் ஏற்றுக்கொள்வதாகவும், இருப்பினும் எதையும் நம்பிக்கையோடு முயற்சித்துப் பார்ப்பதில் தவறில்லை என்பதால் தாம் இந்த செயலில் இறங்கியுள்ளதாகவும் Holbrook-இல் இறந்தவர்களின் உடலைப் பாதுகாத்து வைப்பதற்கான இடத்தை வடிவமைக்கும் Southern Cryonics நிறுவனம் தெரிவித்துள்ளது.
