இஸ்லாமிக் ஸ்டேட் எனப்படும் IS இயக்கத்துடன் இணைவதற்கு திட்டமிட்டிருந்தார் என்ற சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட அடிலெய்ட் யுவதி ஒருவர் குற்றவாளி என்று ஜூரிகளால் ஏகமனதாக தீர்ப்பளிக்கப்பட்டுள்ளார்.
தெற்கு ஆஸ்திரேலிய உயர்நீதிமன்றத்தில் இன்று இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
2016 ஆம் ஆண்டு துருக்கிக்கு சென்று IS இயக்கத்துடன் இணைந்துகொள்வதற்கு பயணமாகவிருந்த நிலையில் அடிலெய்ட் விமானநிலையத்தில் வைத்து பொலீஸாரால் கைது செய்யப்பட்டு, விடுதலை செய்யப்பட்டிருந்த Zainab Abdirahman-Khalif என்பவர், பின்னர் கடந்த ஆண்டு மே மாதம்அவரது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தார்.
இவருக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை பதிவு செய்த பொலீஸார் நீதிமன்றத்தில் சாட்சியங்களை முன்வைத்திருந்தனர்.
இவரது கைத்தொலைபேசியிலிருந்த IS இயக்கத்துடன் தொடர்புடைய 378 ஒலிக்கோப்புக்கள், IS இயக்கத்தினருடன் தொடர்புடைய 125 காணொளிகள் நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்டன. IS இயக்க பாடல்களை சேர்ந்து பாடுவது உட்பட அந்த இயக்கத்தின் சத்தியப்பிரமாணத்தை Zainab Abdirahman-Khalif தனது குரலில் ஏற்றுக்கொள்ளும் ஒலிக்கோப்புக்களும் நீதிமன்றில் சாட்சியங்களாக முன்வைக்கப்பட்டிருந்தன.
தனது தாயாருடனும் இரண்டு சகோதரர்களுடனும் அடிலெய்ட்டில் வாழ்ந்துவந்த Zainab Abdirahman-Khalif, அடிலெய்ட் பல்கலைக்கழகத்தில் தொழில்நுட்ப பாடத்தில் டிப்ளோமா கற்கை நெறியை பூர்த்தி செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த மூன்று வாரங்களாக அடிலெய்ட் உயர் நீதிமன்றில் நடைபெற்ற விசாரணைகளில் முடிவில் , இன்றைய தினம் ஐந்து பெண்கள் மற்றும் ஏழு ஆண்கள் உள்ளடங்கலான ஜூரிகள் சபையால் மூன்று மணி நேர கலந்தாலோசனையின் பின்னர் Zainab Abdirahman-Khalif குற்றவாளி என்று தீர்மானித்து அறிவித்துள்ளனர்.
இவருக்கு எதிரான தண்டனை இன்னமும் அறிவிக்கப்படவில்லை. அதுவரை தடுப்புக்காவலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
