COVID-19 வைரஸ்கள் ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டது தான்; இது விலங்குகளிடமிருந்து மனிதருக்கு தொற்றவில்லை என்ற வாதம் அண்மைக்காலமாக வலுவடைந்து வருகிறதே?
COVID-19 அல்லது corona virus விலங்குகளிடமிருந்து மனிதருக்குப் பரவியிருக்கவேண்டும் என்ற கோட்பாடு வலுவாக நிலைகொண்டிருந்த நிலையில் ‘இல்லை, இது ஆய்வு கூடத்தில் உருவாக்கப்பட்ட ஒரு வைரஸ், accidental-தவறுதலாகவோ அல்லது intentional-வேண்டுமென்றோ வெளியில் விடப்பட்டிருக்கிறது’ என்ற கோட்பாடு மீண்டும் பரந்த அளவில் உலா வந்துகொண்டிருக்கிறது.
இது ஆய்வு கூடத்தில் உருவாக்கப்பட்டதுதான் என்பதற்கு புதிய ஆதாரங்கள் ஏதும் இல்லை என்றபோதும் பத்திரிகை, வானொலி மற்றும் தொலைக்காட்சி போன்ற பொதுசன ஊடகங்கள் ‘இது ஆய்வு கூடத்தில் உருவாக்கப்பட்டதுதான் என்றும் சில ஊடகங்கள் அதற்கு ஒருபடி மேலே சென்று ‘இது ஒரு biological weapon - உயிரியல் ஆயுதம்; குறிப்பிட்ட நாடுகளில் பேரழிவை உண்டாக்க அல்லது மக்களைக் கொல்ல இதுபயன்படுத்தப்பட்டு வருகிறது’ என்றும் கடந்த ஒருமாதகாலமாக கருத்துகளை முன்வைத்து வருகின்றன.

Vaccine worker in the laboratory working on the Oxford University COVID-19 vaccine. Source: AAP
உலகில் ஏறக்குறைய 17 லட்சம் வைரஸ் வகைகள் இருப்பதாக நிபுணர்கள் சொல்கிறார்கள். இவற்றுள் மனிதர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவது சுமார் 219 வைரஸ் வகைகள் மட்டுமே.
கடந்த 70 வருடகால வரலாற்றைப்பார்க்கும்போது, மனிதர்களைப் பாதித்த வைரஸ்களுள் சுமார் 60 சதவீதமான வைரஸ்கள் விலங்குகளிடமிருந்தே வந்திருக்கின்றன. Corona virus குடும்பத்தைச் சேர்ந்த MERS மற்றும் SARS, பிற வைரஸ்களான plague, Rabies, West Nile virus, HIV virus, Ebola, Influensa, Nipah, Zika, Yellow fever போன்ற எல்லா வைரஸ்களும் விலங்குகளிடமிருந்தே மனிதருக்குப் பரவின என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இந்த COVID- 19 வைரஸ், குறிப்பிட்ட இந்த விலங்குகளிடமிருந்து அல்லது விலங்கினங்களிடமிருந்துதான் வந்தது என்பது இதுவரை நிரூபிக்கப்படவில்லை. இதையொத்த வைரஸ்கள் horse shoe bat என்ற வௌவால்களில் இருப்பதாகக் கூறப்பட்டாலும், மரபணு என்ற genome ஐப் பொறுத்த அளவில் பெரிய வித்தியாசம் உண்டு.
ஆகவே, ‘ஆய்வு கூடத்தில் உருவாக்கப் பட்டதுதான் இந்த வைரஸ்’ என்ற வாதம் வலுவடைந்து வருகிறது. இதற்குப் பின்னணியில், இந்த வைரஸின் மூலம் என்ன என்பதை அறிவதில் அமெரிக்கா மீண்டும் காட்டிவரும் அக்கறையும் இருக்கிறது என்று சொல்லலாம்.

Horseshoe Bats - mass hanging at roost. Source: AAP Images/Mary Evans/Ardea/M. Watson
‘COVID- 19 வைரஸ் எங்கிருந்து வந்தது எனபது தொடர்பான விசாரணைகளை CIA போன்ற நிறுவனங்கள் முடுக்கிவிடவேண்டும்’ என்று அமெரிக்க அதிபர் Joe Biden அண்மையில்உத்தரவு பிறப்பித்திருக்கிறார். இதில் அரசியல் நோக்கங்கள் இல்லாமலில்லை.
அத்தோடு 2019 நவம்பர் மாதம், Wuhan ஆய்வகத்தில் பணிபுரிந்த மூன்று விஞ்ஞானிகள், COVID- 19 நோயால் பாதிக்கப்பட்டதற்குச் சமமான அறிகுறிகளுடன் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டதாக Wall Street Journal சென்றமாதம் செய்தி ஒன்றை வெளியிட்டிருக்கிறது.
இந்த பின்னணியில், ‘COVID- 19 வைரஸ்கள், ஆய்வுகூடத்தில் உருவாக்கப்பட்டவை; இவை உயிரியல் ஆயுதமாகப் பிரயோகிக்கப்படும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டிருக்கலாம்’ என்ற கருத்துக்கள் தொடர்ந்து தெரிவிக்கப்பட்டுவருகின்றன.
மனிதருக்கு தீங்கு விளைவிக்கும் வைரஸ்களை சில நாடுகள் தங்கள் ஆய்வகங்களில் பாதுகாத்து வைத்திருப்பதாகச் சொல்லப்படுகிறதே?
மனிதர்க்கு தீங்கு விளைவிக்கக் கூடிய வைரஸ்களை பல நாடுகள் தமது laboratories-ஆய்வகங்களில் வைத்திருக்கின்றன என்பது புதிய செய்தியல்ல. 20 வருடங்களுக்கு முன் உலகில் முற்றாக ஒழிக்கப்பட்டுவிட்டது என்று WHO அறிவித்த smallpox பெரியம்மை நோய் வைரஸ்கள், உறைந்த நிலையில் இன்றும் அமெரிக்கா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளில் ஆய்வகத்தில் இருக்கின்றன.
இதுமட்டுமல்ல, மிகக் கொடிய நுண்ணுயிர்கள் மற்றும் வைரஸ்களான anthrax, Ebola, typhus போன்ற 20 இற்கும் மேற்பட்டவை, பல நாடுகளில் ஆய்வகங்களில் உறை நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

Defence says there is no risk from potentially live anthrax disease spores received from the US. (AAP) Source: AAP
Anthrax கிருமிகள் உற்பத்திசெய்யும் spores என்ற நுண்ணுயிர் வித்துக்கள்100 வருடங்கள் வரை active ஆக இருக்கும் என்றும் அணுகுண்டு ஒன்று ஏற்படுத்தக்கூடிய அழிவை anthrax கிருமிகளால் ஏற்படுத்த முடியும் என்றும் சொல்லப்படுகிறது.
அமெரிக்கா, ரஷ்யா, ஈராக், பிரிட்டன், ஜப்பான், கனடா போன்ற நாடுகளிடம் உயிரியல் ஆயுதங்கள் ஒரு கட்டத்தில் இருந்தன; இப்போது இல்லை என்று சொல்லப்படுகிறது. சீனா, வடகொரியா, ஈரான் போன்ற நாடுகள் உயிரியல் ஆயுதங்களைளைத் தொடர்ந்து விஸ்தரித்து வருவதாக மேற்குலக நாடுகள் தொடர்ந்து கூறிவருகின்றன.
இரண்டாம் உலகப்போரின்போது, ஜப்பானிய இராணுவம் anthrax, cholera, plague போன்ற நோய்க்கிருமிகளையும் வைரஸ்களையும் சீனக் கைதிகளுக்குக் கொடுத்து பரிசோதித்தது என்றும் இதன்காரணமாக நூற்றுக்கணக்கான கைதிகள் இறந்ததாகவும் கூறப்பட்டாலும் இப்படியான சம்பவம் ஒன்று நிகழவே இல்லை என்று சொல்பவர்களும் உண்டு.
எப்படியிருந்தபோதும், இராணுவ பலத்தால் சாதிக்கமுடியாததை உயிரியல் ஆயுதங்களைக் கொண்டு சாதிப்பதற்கு சில நாடுகள் அல்லது தீவிரவாத இயக்கங்கள் முனையக்கூடும் என்பதில் கருத்துவேறுபாடு இல்லை.
ஆய்வு கூடத்திலிருந்து தவறுதலாக வெளியேறிய வைரஸ்கள் என்று பார்த்தால் 1977 இல் ரஷ்யாவில் ஆய்வு கூடத்திலிருந்து தவறுதலாக வெளியேறிய Influenza virus ஒன்று மட்டுமே பதிவாகியிருக்கிறது. இது ‘1977 Russian Influenza Outbreak’ என்ற பெயரில் குறிப்பிடப்படுகிறது.
COVID- 19 ஐப் பொறுத்த அளவில், இன்றைய நிலையில் ‘இது விலங்குகளிடமிருந்து தான் வந்தது’ என்பது உறுதியாகச் சொல்லமுடியாத நிலையும் ‘ஆய்வு கூடத்திலிருந்து வெளியேறவில்லை’ என்பதும் உறுதியாகச் சொல்லமுடியாத நிலையும் நிலவுவதால், இந்தத் துறையில் உள்ள நிபுணர்களிடையேயும் ஏகோபித்த கருத்து இல்லை.

Colorized scanning electron micrograph of a cell (blue) heavily infected with SARS-CoV-2 virus particles (red). Source: Getty
நிபுணர்களுள் சுமார் 60 சதவீதத்தினர் ‘இது விலங்குகளிடமிருந்து வந்தது’ என்றும் சுமார் 40 சதவீதத்தினர் ‘ஆய்வு கூடத்தில் உருவாக்கப்பட்டு தவறுதலாக வெளியேறியிருக்கலாம்’ என்ற கருத்தையும் தெரிவித்து வருகிறார்கள்.
சீனாவில், Wuhan இல் உள்ள ஆய்வகத்தில் இருந்து இந்த வைரஸ்கள் வெளியேறின என்பது தொடர்பாகவும் இந்த வைரஸ் ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டது தான் என்பதற்கும் எதிராக முன்வைக்கப்படும் கருத்துக்கள் என்ன?
சீனாவில் Wuhan என்ற இடத்திலுள்ள ஆய்வகத்திலிருந்து இந்த வைரஸ்கள் வெளியேறினவா என்பதை ஆராய WHO -உலக சுகாதார நிறுவனத்தின் சார்பில் கடந்த ஜனவரி மாதம் அங்கு சென்ற குழுவில் இடம்பெற்றிருந்த பிரிட்டிஷ் விஞ்ஞானியான Dr. Peter Daszak, இந்த வைரஸ்கள் Wuhan ஆய்வகத்தில் இருந்து வெளியேறியிருக்க சாத்தியமே இல்லை என்று தெரிவித்திருந்தார். இதையே அவரது குழுவினர்களும் தெரிவித்திருந்தார்கள். இந்தக் கருத்தையே WHO உறுதி செய்தது. ஆனால் Dr. Daszak இன் கருத்து பக்கச்சார்பானது என்று இப்போது சொல்லப்படுகிறது.
Wuhan ஆய்வகத்திலிருந்து வைரஸ்கள் வெளியேறின என்ற theory-ஐ கோட்பாட்டை, சீனா நிராகரித்தே வந்திருக்கிறது. சென்ற வாரம் இது பற்றி கருத்து தெரிவித்த சீனாவின் வெளிநாட்டு அலுவல்கள் துறைப் பேச்சாளர் Zhao Lijian , ‘Biden இன் இந்த புதிய விசாரணை, சீனாவின் மீது களங்கம் சுமத்தும் நோக்கத்தோடும், பழி சுமத்தும் நோக்கத்தோடும் நடத்தப்படும் அரசியல் சூழ்ச்சியாகும்’ என்று தெரிவித்திருக்கிறார்.

Researchers working in a lab at Wuhan Institute of Virology (WIV). Source: EPA/FEATURECHINA
ஆனால் அமெரிக்க டாக்டரும் முன்னாள் இராணுவ அதிகாரியுமான லாரன்ஸ் செல்லின் கருத்து தெரிவிக்கும்போது, “இது சீனாவின் உயிரியல் போர்த்திட்டம்; கொரோனா வைரஸ் சீனாவில் ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டது. சீன கம்யூனிஸ்ட் கட்சிதான் இதற்குப் பொறுப்பு; என்று கூறியிருக்கிறார்.
COVID-19 வைரஸ்கள் ஆய்வகத்தில் உருவாக்கப்ட்டது என்ற வாதத்தை எடுத்துக்கொண்டால், அதற்கான ஆதாரங்கள் போதுமானதாக இல்லை என்றே பல நிபுணர்கள் சொல்கிறார்கள்.
‘வெறும் சூன்யத்திலிருந்து வைரஸ் ஒன்றை உருவாக்கமுடியாது; அது விஞ்ஞான புனைகதைகளில் மட்டுமே சாத்தியம். இன்றைய விஞ்ஞான காலகட்டத்தில் அது சாத்தியமில்லை.
இப்படி ஒரு வைரஸை உருவாக்க ஏற்கனவே நோயை ஏற்படுத்துகிறது என்பது உறுதி செய்யப்பட்ட வைரஸ் ஒன்றைத் தெரிவு செய்யவேண்டும். அதை ஒரு பேரழிவு ஏற்படுத்தும் வைரஸாக மாற்றுவதற்கு அதன் மரபணுக்களில் பாரிய மாற்றங்களை உண்டாக்குவது மிக மிக சிரமமானது மட்டுமல்ல அதில் mutations என்ற உருமாற்றத்தை ஏற்படுத்துவது முற்றிலும் முடியாத காரியமாகும். கடந்த ஒருவருடகாலமாக இந்த COVID- 19 வைரஸ்கள் உலகில் பல்வேறு ஆய்வகங்களில் ஆய்வு செய்யப்பட்டுவரும் நிலையில் இந்த வைரஸின் மரபணுக்களில் செயற்கையான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக எந்த ஒரு விஞ்ஞானியும் கண்டுபிடிக்கவில்லை’
என்று அமெரிக்காவில் Mount Sinai பல்கலைக்கழக பேராசிரியர் Christian Stevans கூறியிருக்கிறார்.
COVID- 19 ஒரு உயிரியல் ஆயுதம் biological weapon என்ற கருத்தில் எவ்வளவு உண்மையிருக்கிறது?
இது ஒரு உயிரியல் ஆயுதமாக வடிவமைக்கப்பட்டிருக்க க்கூடுமா என்று பார்க்கும்போது, அப்படி வடிவமைப்பதாக இருந்தால் Cov 2 வை விட மிகக்கொடிய வைரஸ்தான் தெரிவு செய்யப்பட்டிருக்கவேண்டும்; இது ஆபத்தான வைரஸ் அல்ல என்றும் நிபுணர்கள் சொல்கிறார்கள். அத்தோடு இப்போது பேசப்படும் உருமாறிய கொரோனா வைரஸ் வகைகளை ஆய்வு செய்யும்போது இவை இயற்கையான வைரஸ்களில் ஏற்படும் variant- உருமாற்றத்தையே பிரதிபலிப்பதாகவும் அமெரிக்காவில் Fred Hutch research centre ஐச் சேர்ந்த பேராசிரியர் Trevor Bedford சொல்கிறார்.
உயிரியல் ஆயுதமென்பது, மனிதருக்கோ விலங்குகளுக்கோ தாவரங்களுக்கோ பெருமளவில் அழிவை அல்லது சேதத்தை ஏற்படுத்த, நுண்ணுயிர்கள் -கிருமிகள் வைரஸ்கள் என்பவற்றை ஆயுதமாகப் பயன்படுத்திக்கொள்வதாகும். அப்படிப்பார்க்கும்போது,
- அதற்கு தெரிவுசெய்யப்படும் நுண்ணுயிர்கள் மிக கொடிய நோயை ஏற்படுத்தக்கூடிய நுண்ணுயிர்களாகவும் பெருமளவில் உற்பத்தி செய்வதற்கு எளிதானவையாகவும் இருக்கவேண்டும்;
- outdoors என்ற வெளியிடங்களில் சூரிய ஒளிபடும் இடங்களில் தொடர்ந்து உயிர்வாழக்கூடியவையாகவும் இருக்கவேண்டும், நோய் தாக்கியவர்களுள் பெரும்பாலானோர் இறந்திருக்கவேண்டும்;
- வைரஸைக் கட்டவிழ்த்து விடுபவர்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது;
என்பன போன்ற தன்மைகளை வைத்துப் பார்க்கும் போது COVID- 19 வைரஸ்கள் உயிரியல் ஆயுதமாகப் பயன்படுத்தப்படக்கூடிய தன்மைகளைக் கொண்டவையாக இல்லை என்றே பல நிபுணர்களும் சொல்கிறார்கள்.
உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது கொரோனாவைரஸ்உதவிமையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக்கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற்சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.
உங்களுக்கு கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.
ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.
அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.
கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
Share
