மெல்பேர்ன் Bundoora பகுதியில் இடம்பெற்ற இஸ்ரேலிய மாணவி Aiia Maasarwe படுகொலையுடன் தொடர்புடையவர் என்று சந்தேகிக்கப்படும் நபரை தாங்கள் கைது செய்துள்ளதாக விக்டோரிய பொலீஸார் அறிவித்துள்ளனர்.
மெல்பேர்ன் Greensborough பிரதேசத்தை சேர்ந்த 20 வயதுடைய இந்த நபரை சந்தேகத்தின் பேரில் இன்று முற்பகல் 11.40 மணியவில் அவர் வீட்டில் வைத்து கைது செய்துள்ளதாக பொலீஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் இடம்பெற்று இரண்டு நாட்களாக மாணவியின் படுகொலை மர்மம் நிறைந்ததாக காணப்பட்டதுடன் கொலைக்கான எந்த சாட்சிகளும் கிடைக்காமல் பொலீஸார் பொதுமக்களிடம் உதவி கோரியிருந்தனர். இந்நிலையில், கொலை இடம்பெற்றதாக கூறப்படுகின்ற இடத்திலிருந்து எடுக்கப்பட்ட ரீ சேர்ட் மற்றும் தொப்பியை பொதுமக்களின் பார்வைக்கு காண்பித்த பொலீஸார் அவற்றுக்கு சொந்தமானவர்களாக சந்தேகித்தால் அவர்களை தமக்கு தெரியப்படுத்தும்படியும் கோரியிருந்தனர்.
கொலை இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்ட அன்று இரவு அல்லது அடுத்த நாள் காலை இரத்தக்கறையுடன் வீட்டுக்கு வந்தவர்கள் அல்லது அதுபோன்ற சந்தேகத்துக்கிடமான நடவடிக்கையுடன் காணப்பட்டவர்களை தமக்கு தெரியப்படுத்தும்படியும் பொலீஸார் வேண்டுகோள் விடுத்திருந்தனர்.
இதேவேளை, தமது தரப்பில் பெரும் எண்ணிக்கையிலான விசாரணை அதிகாரிகளை களத்தில் இறக்கியிருந்த பொலீஸார் இரவு பகலாக கொலையாளி யை சல்லடை போட்டு தேடிவந்தனர்.கொலையினால் அதிர்ச்சியடைந்த மாணவியின் குடும்பத்தினர் ஆஸ்திரேலியாவுக்கு வந்துகொண்டிருக்கிறார்கள் என்றும் அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு தம்மிடம் பதில் இருக்கவேண்டும் என்றும்கூட பொலீஸார் நேற்று கூறியிருந்தனர்.
கொலை எவ்வாறு இடம்பெற்றிருக்கிறது என்பது குறித்தும் கொலையில் குறிப்பிட்ட மாணவிக்கு எவ்வகையான காயங்கள் ஏற்பட்டிருக்கிறது என்பது குறித்தும் பொலிஸார் எந்த தகவலையும் வெளியிட மறுத்திருந்தனர். கொலையுண்ட மாணவியின் குடும்பத்தினரின் உணர்வுகளுக்கு மதிப்புக்கொடுக்கும் வகையில் அந்த தகவல்களை பொதுவெளியில் வெளியிடப்போவதில்லை என்றும் கூறியிருந்தனர்.
ஆனாலும் இந்தக்கொலை மிகவும் கொடூரமான முறையில் நிகழ்த்தப்பட்டிருப்பதாக மாத்திரம் தெரிவித்திருந்தனர்.இந்திலையில், இன்று காலை இந்த கைது இடம்பெற்றுள்ளது. விசாரணைகளை அடுத்து குறிப்பிட்ட நபர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
