சவுதி ஊடகவியலாளர் ஜமால் கஸோஜி படுகொலை சம்பவத்தை அடுத்து சவுதி மன்னர் தலைமையில் அந்நாட்டில் நடைபெறவிருந்த சர்வதேச மாநாட்டினை ஆஸ்திரேலியா புறக்கணித்துள்ளது.
இந்த செய்தியை கன்பராவில் உள்ள சவுதி தூதுவருக்கு அறிவித்தது மட்டுமல்லாமல் ரியாத்தில் உள்ள ஆஸ்திரேலிய தூதுவரின் ஊடாக அந்நாட்டு அரசுக்கும் தெரியப்படுத்தியுள்ளது.
22 ஆம் நூற்றாண்டில் உலக நாடுகளில் மேற்கொள்ளக்கூடிய புதிய அபிவிருத்தி மற்றும் முதலீடுகள் குறித்து ஆராயும் மாநாடு ஒன்றினை சவுதி அரசு கடந்த வருடம் முதன் முதலாக தனது நாட்டில் ஆரம்பித்திருந்தது. இதில் பல நாடுகளையும் சேர்ந்த தலைவர்கள் மற்றும் வர்த்தக பெரும்புள்ளிகள் கலந்துகொண்டிருந்தனர்.
வெற்றிகரமாக நடைபெற்ற இந்த மாநாட்டின் இரண்டாவது வருட நிகழ்வு, நாளை மறுதினம் 23 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதிவரை ரியாத்தில் நடைபெறுவதற்கு ஏற்பாடாகியிருந்தது.
தூதரகத்தில் வைத்து ஜமால் படுகொலைசெய்யப்பட்ட சம்பவத்தில் சவுதி அரசுக்கு எதிரான சர்வதேச அழுத்தம் அனைத்து தரப்பிலும் அதிகரித்துவரும் இந்நிலையில், இந்த மாநாட்டில் கலந்துகொள்வது பொருத்தமாக இராது என்று கூறியுள்ள ஆஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் Marise Payne, மாநாட்டை புறக்கணிப்பதாக ஏற்கனவே அறிவித்துள்ள பிரான்ஸ் மற்றும் நெதர்லாந்து நாடுகளுடன் தாமும் இணைந்துகொள்வதாக கூறியிருக்கிறார்.
இதற்கு முன்னர், ஆஸ்திரேலிய எதிர்க்கட்சித்தலைவர் Bill Shorten அவர்களும் ஜமால் படுகொலை விவகாரத்தில் ஆஸ்திரேலிய அரசின் கடும் கண்டனத்தை சவுதி அரசுக்கு தெரிவிக்கவேண்டும் என்று வெளிவிவகார அமைச்சரிடம் கோரியிருந்தார்.
இந்தநிலையில் சவுதி அரசு ஜமால் படுகொலை சம்பவம் தொடர்பாக பாரபட்டசமற்ற விசாரணையை மேற்கொண்டு தனது நாட்டு குடிமகன் ஒருவருக்கு எதிராக இழைக்கப்பட்டுள்ள குற்றத்துக்கான நீதியை பெற்றுக்கொடுக்கவேண்டும் என்றும் ஆஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் Marise Payne வலியுறுத்தியுள்ளார்.
