ஆஸ்திரேலிய உள்துறை அமைச்சர் பீற்றர் டட்டன், நீதிமன்றை அவமதிக்கும் வகையில் நடந்துகொண்டால், தண்டனைபெறும் வாய்ப்புக்கள் உள்ளதாக பெடரல் நீதிமன்ற நீதிபதி நேற்று நடைபெற்ற வழக்கொன்றில் கடுந்தொனியில் கூறியுள்ளார்.
மூன்றரை வருடங்களுக்கு முன்னர் ஈரானிய அகதியொருவர் விண்ணப்பித்த பாதுகாப்பு விசா தொடர்பிலான வழக்கின்போதே நீதிபதி Geoffrey Flick இக்கருத்தினைத் தெரிவித்தார்.
குறிப்பிட்ட அகதியின் வழக்கு கடந்த நீதிமன்ற அமர்வில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, அகதியின் விண்ணப்பம் தொடர்பில் கூடிய விரைவில் பதிலளிக்கும்படி உள்துறை அமைச்சருக்கு நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
ஆனால், அதன் பின்னர் குறிப்பிட்ட அகதியின் சட்டத்தரணிக்கு மின்னஞ்சல் அனுப்பிய உள்துறை அமைச்சரின் வழக்கறிஞர்கள் குழு, தாங்கள் மேன் முறையீடு செய்யப்போவதாக தெரிவித்திருக்கிறார்கள்.
இந்த விடயம் நேற்றைய தினம் நீதிமன்றத்தில், அகதி சார்பிலான சட்டத்தரணிகளால் முன்வைக்கப்பட்டபோது, கடும் சீற்றமடைந்த நீதிபதி Geoffrey Flick, உள்துறை அமைச்சு நீதிமன்ற நடவடிக்கைகளை அவமதிக்கும் வகையிலும் - நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையிலும் நடந்துகொள்வதாக கடுமையான கண்டனத்தை பதிவு செய்தார்.
நீதிமன்றத்தினை அவமதிக்கும் வகையில் நடந்துகொள்ளும் அமைச்சரின் குற்றம் உறுதிப்படுத்தப்பட்டால் அவருக்கு தண்டப்பணம் அறவிடக்கூடாதென்றோ அல்லது சிறையில் அடைக்கக்கூடாதென்றோ எந்த தடையும் இல்லை என்றும் நீதிபதி காட்டமாக தெரிவித்துள்ளார்.
குறிப்பிட்ட அகதியின் விண்ணப்பம் தொடர்பில் எதிர்வரும் 26 ஆம் திகதிக்கு முன்னர் பதிலளிக்கும்படியும் உத்தரவிட்டார்.
