பொலீஸ் திணைக்களத்தினை சட்டவிரோதமாக தனது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே தற்போது நாட்டில் இடம்பெற்ற பேரனர்த்தத்திற்கு பொறுப்பேற்கவேண்டும் என்று தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ. சுமந்திரன் இன்று நாடாளுமன்றத்தில் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில் -சிறிலங்கா அரசமைப்பின் 19 ஏ பிரிவில் மாற்றம் கொண்டுவரப்பட்டு அது நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதன் பிரகாரம், மகாவில அமைச்சு - பாதுகாப்பு அமைச்சு, சூழலியல் திட்டங்கள் அமைச்சு ஆகியவை மாத்திரமே ஜனாதிபதியின் ஆளுகையின் கீழ் கொண்டுவரப்படும்.
ஆனால், அவற்றுக்கு மேலதிகமாக ஜனாதிபதி மைத்திரி பொலிஸ் விவகாரம் அடங்கிய சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சினையும் தனது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்தார். இது அரசமைப்புக்கு முரணனாது. சட்டவிரோதமானது. ஆக, நாட்டில் இடம்பெற்றுள்ள மிகப்பெரிய பாதுகாப்பு தோல்விக்கு ஜனாதிபதியே பொறுப்பேற்கவேண்டும் - என்று அவர் கூறியுள்ளார்.
நாட்டின் பாதுகாப்பு குறித்த தகவல்கள் உயர்மட்டங்களிடம் வழங்கப்பட்டபோதும் அவை குறித்து ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பது குறித்து மிகப்பாரதூரமான கேள்விகள் எழுந்துள்ளன. இதற்கு காரணமான அதி உயர் மட்டத்தில் உள்ளவர்கள் உடனடியாக பதவி விலகவேண்டும் என்றும் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
