கொழும்பு தற்கொலைக்குண்டு தாக்குதல்களில் வெடித்துச்சிதறிய குண்டுதாரி ஒருவர் தனது மேற்படிப்பை ஆஸ்திரேலியாவில் நிறைவு செய்தவர் என்று சிறிலங்காவின் இராஜாங்க பாதுகாப்பு அமைச்சர் ருவான் விஜேவர்த்தன தெரிவித்துள்ளார்.
இன்று கொழும்பில் வெளிநாட்டு ஊடகவியலாளர்களுடன் சந்திப்பொன்றை மேற்கொண்டு கேள்விகளுக்கு பதிலளிக்கும்போதே அவர் மேற்படி தகவலை கூறினார்.
அவர் மேலும் கூறும்போது - நாட்டின் பாதுகாப்பு மற்றும் நடைபெற்றுவரும் விசாரணைகளின் அடிப்படையில் தன்னால் வேறு தகவல்களை கூறமுடியாது என்றும் இப்போதைக்கு சில செய்திகளை மாத்திரம் உறுதிப்படுத்தமுடியும் என்றும் தெரிவித்தார்.
ஆஸ்திரேலியா, இந்தியா, அமெரிக்கா, சவூதி உட்பட பல்வேறு வெளிநாட்டு புலனாய்வு அமைப்புக்கள் சிறிலங்காவின் தற்போதைய விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு நல்கி வருவதாகவும் கைது செய்யப்பட்ட நாற்பதுக்கும் மேற்பட்டவர்கள் தொடர்ச்சியாக விசாரிக்கப்பட்டுவருவதாகவும் அமைச்சர் கூறினார்.
தற்கொலைக்குண்டுத்தாக்குதல்கள் குறித்து அவர் மேலும் கூறும்போது - மொத்தம் ஒன்பது தற்கொலைக்குண்டுதாரிகள் ஈஸ்டர் நாள் தாக்குதலில் ஈடுபட்டிருக்கிறார்கள் என்பது இப்போதைக்கு தெரியவந்துள்ளது என்றும் அவர்களில் எட்டுப்பேர் இதுவரை இனங்காணப்பட்டிருக்கிறார்கள் என்றும் அமைச்சர் கூறினார். ஒன்பதாவது நபர் இன்னொரு தற்கொலைக்குண்டுதாரியின் மனைவி என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
