ஆஸ்திரேலியாவில் வாழும் பல்லின சமூகங்களில் பொறுப்புள்ள தலைவர்களாக உள்ளவர்கள் தங்கள் சமூகங்களில் உள்ள பிரச்சினைக்குரியவர்களை அடையாளம் காணவேண்டும். அவர்களால் இந்த நாட்டுக்கு ஏற்படக்கூடிய ஆபத்துக்களை முன்கூட்டியே இனங்காணவேண்டும். அதற்குரிய பொறுப்பு அவர்களுக்கு இருக்கிறது- என்று பிரதமர் Scott Morrison கூறியுள்ளார்.
மெல்பேர்னில் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவம் தொடர்பாக ஆஸ்திரேலிய ஊடகமமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்திருக்கிறார்.
மெல்பேர்னில் Bourke வீதியில் இடம்பெற்ற சம்பவத்துக்கு காரணமான நபர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்றும் அவர் உளநல உதவிகளுக்காக அண்மைக்காலமாக ஏங்கிக்கிடந்தவர் என்றும் சோமாலிய மதத்தலைவர்கள் தற்போது அறிக்கை விடுத்திருப்பது தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போது அந்தக்காரணங்களை பிரதமர் முற்றாக மறுத்திருக்கிறார் .
'மனநிலை பாதிக்கப்பட்டவரா, பயங்கரவாதியா என்ற விவாதத்துக்கு இங்கு இடமில்லை. அவர் பயங்கரவாத நடவடிக்கைகளுடன் தொடர்புடையவர் என்று ஏற்கனவே அடையாளம் காணப்பட்டிருக்கிறார். எனவே சமூகத்தலைவர்கள் தங்கள் சமூகங்களில் பிரச்சினைக்குரியவர்கள் எவ்வாறு , யாரை தம் வசப்படுத்துகிறார்கள் எதற்காக அதனை செய்கிறார்கள் என்பது தொடர்பாக பொறுப்புடன் கண்காணிக்கவேண்டியவர்களாக உள்ளார்கள். சமூகத்தலைவர்கள் இந்த நாட்டில் வன்முறைகளை ஒழிப்பதற்கும் இப்படியான குழப்பங்களை முன்கூட்டியே தவிர்ப்பதற்கும் ஏற்றவகையில் ஒற்றுமையாக செயற்படுவதும் அவசியம்'- என்று பிரதமர் கூறியுள்ளார்.
