விக்டோரியாவின் புறநகர் பகுதியான Marysville பிரதேசத்தில் மர்மமான முறையில் காணாமல்போயிருந்த இந்திய மாணவனை அவசர சேவைப்பிரிவினர் தொடர்ந்தும் தேடிவந்த நிலையில் அவர் சடலமாக மீட்கப்பட்டார்.
குறிப்பிட்ட மாணவனைத் தேடும்பணி கடந்த நான்கு நாட்களாக நடைபெற்று வந்தது.
இந்தியாவை சேர்ந்த 21 வயது மாணவனான Poshik Sharma நான்கு நாட்களுக்கு முன்னர் Marysville பிரதேசத்திலுள்ள கேளிக்கை விடுதியில் தனது சகாக்களுடனிருந்துவிட்டு, அவர்களுடன் வாக்குவாதம் ஏற்பட்ட பின்னர் அங்கிருந்து வெளியேறிச்சென்றுள்ளார்.
அதன்பின்னர், அவருடனான எந்தத்தொடர்பும் கிடைக்கவில்லை. தொலைபேசி, சமூகவலைத்தளங்கள் எதிலுமே அவரை தொடர்புகொள்ளமுடியவில்லை.
காடுகளும் பெரும் பற்றைகளும் நிறைந்த Marysville பிரதேசத்திற்குள் அவர் தொலைந்துபோயிருப்பாரா அல்லது யாருடனாவது வாகனத்தில் ஏறிச்சென்றிருப்பாரா என்று அறிவதற்கு மேற்கொள்ளப்பட்ட உடனடி முயற்சிகள் எதுவும் பலிக்கவில்லை.
இதையடுத்து அவரது நண்பர்கள் அவசர சேவைகள் பிரிவினருக்கு அறிவித்ததைத் தொடர்ந்து அவரைத் தேடும்பணி நடைபெற்றுவந்த நிலையில் அவரது சடலம் இன்று காலை 11 மணிக்கு மீட்கப்பட்டுள்ளது.
குறித்த நபரின் மரணம் சந்தேகத்திற்கிடமான ஒன்றாக கருதப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
