Mount Waverley யிலுள்ள தமது வீட்டில் 8 வருடங்களுக்கு மேலாக பெண் ஒருவரை அடிமையாக அடைத்து வைத்திருந்ததாக கந்தசாமி கண்ணன் மற்றும் குமுதினி கண்ணன் ஆகிய தம்பதியினர் மீதே குற்றச்சாட்டுப் பதியப்பட்டு Melbourne Magistrates' நீதிமன்றில் இன்று இவ்வழக்கு விசாரிக்கப்பட்டுள்ளது.
2007 ம் ஆண்டில் கண்ணன் தம்பதியினரின் மூன்று குழந்தைகளை பராமரிக்கவென சுற்றுலாப்பயணிகள் விசாவில் குறித்த அந்த இந்தியப் பெண் இங்கு வந்துள்ளார். தான் வீட்டைவிட்டுத் தனியாக வெளியே செல்ல அனுமதிக்கப்படவில்லை என்றும், தனக்கு எந்தவிதமான ஊதியமும் வழங்கப்படவில்லை என்றும் அத்துடன் திருமதி கண்ணன் தன்னை பல தடவைகள் தாக்கி அடித்தார் எனவும் அப்பெண் தெரிவித்ததாக போலீசார் நீதிமன்றில் கூறியுள்ளனர்.
சமையல் சரியில்லையெனக் கூறியும், துப்பரவுப் பணி தரமாக இல்லையெனக் சுட்டிக்காட்டியும் அப்பெண்ணின் தலைமுடியைப் பற்றியிழுத்து, frozen காய்கறிகளினாலும் கத்தியினாலும் அப்பெண் திருமதி கண்ணனினால் தாக்கப்பட்டதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகாலை 5:30 மணி தொடக்கம் மறுநாள் அதிகாலை 3:30 மணிவரை, எவ்வித இளைப்பாறலுமின்றி அப்பெண் பணிபுரிய வைக்கப்பட்டுள்ளார் எனவும் போலீசார் கூறுகின்றனர்.
கண்ணன் குடும்பத்தினர் 2015இல் ஒரு மாத சுற்றுலா சென்ற போது, அப்பெண்ணை வீட்டில் அடைத்து வைத்துவிட்டுச் சென்றுள்ளனர். சரியான சாப்பாடு இல்லாமையினால் அப்பெண் குளியலறையில் மயங்கிவிழுந்து, எழும்பமுடியாத நிலையில் சிறுநீர் வெள்ளத்தில் கிடந்துள்ளார் என்றும், பின்னர் அப்பெண்ணை திருமதி கண்ணன் பொய்ப்பெயரில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்திருந்தார் என்றும் கூறப்பட்டுள்ளது.
குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள கண்ணன் தம்பதியினர், அப்பெண்ணைத் தமது குடும்பத்தில் ஒருவராகவே தாம் நடத்தி வந்ததாகத் தெரிவித்துள்ளனர்.
"The complainant voluntarily came to Australia … she became part of the family … she became like the children's grandmother," he said.
இவ்வழக்கு தொடர்ந்தும் நடைபெறவுள்ளது.
