பயங்கரவாத குற்றங்களில் ஈடுபடுகின்றவர்களின் ஆஸ்திரேலிய குடியுரிமையை பறிக்கப்போவதாக உள்துறை அமைச்சர் Peter Dutton அறிவித்துள்ள நடைமுறை சட்ட ரீதியான முரண்பாடுகளை ஏற்படுத்தப்போகிறது என்றும் குற்றவாளிகள் என்பதற்காக அவர்களை நாடற்ற அநாதைகளாக தூக்கியெறிவது சட்டவிரோத செயல் என்றும் ஆஸ்திரேலிய சட்டப்பேரவை தெரிவித்துள்ளது.
ஆஸ்திரேலியாவில் அதிகரிக்கும் பயங்கரவாத செயல்களை அடுத்து, இவ்வாறான குற்றங்களில் ஈடுபடுகின்றவர்கள் வெளிநாட்டை பூர்வீகமாக கொண்டிருந்தால், அவர்களது ஆஸ்திரேலிய குடியுரிமையை பறித்துவிட்டு அவர்களது பூர்வீக நாடுகளுக்கு திருப்பி அனுப்பப்போவதாகவும் - இதன் மூலம் நாட்டின் பாதுகாப்பினை உறுதிசெய்யப்போவதாகவும் Peter Dutton அறிவித்திருந்தார்.
இவ்வாறு திருப்பியனுப்பப்படுபவர்களை சில நாடுகள் ஏற்றுக்கொள்ளாத சூழ்நிலை காணப்படுகின்றமை தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அவர் எந்த சூழிநிலையிலும் தனது தண்டனைக் காலம் முடிந்த பின்னர் குறித்த நபர் நாடுகடத்தப்படுவார் என பதிலளித்திருந்தார்.
அமைச்சரின் இந்த அறிவிப்பு சர்வதேச விதி முறைகளுக்கு முரணானது என்றும் குற்றவாளிகள் என்பதற்காக ஒருவரை நாடற்ற அநாதையாக சிறையில் தள்ளுவதற்கு ஆஸ்திரேலியா முயற்சி செய்கிறதா என்றும் ஆஸ்திரேலிய சட்டப்பேரவை கேள்வி எழுப்பியுள்ளது.
இதற்கு பதிலளித்துள்ள Peter Dutton, தான் மேற்கொள்கின்ற நடவடிக்கையில் எந்தப்பிரச்சினையும் இல்லை என்றும் சரியான பாதையில் சில காரியங்களை முன்னெடுக்கும்போது இப்படியான சட்ட அழுத்தங்களை தான் குடிவரவு அமைச்சராக பதவி வகித்த காலத்திலும் முகங்கொடுத்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
